தினகரனுடன் தொடரும் மோதல்.. மன்னார்குடியில் தனிக்கட்சியை தொடங்கினார் திவாகரன்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா அணி என்ற கட்சியை திவாகரன் தொடங்கினார்.
திருவாரூர்: மன்னார்குடியில் அம்மா அணி என்ற கட்சியையும் தொடங்கிய திவாகரன் அதற்கான அலுவலகத்தையும் திறந்துள்ளார்.
சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. தினகரன்- திவாகரன் இடையிலான சண்டை வீதிக்கு வந்துள்ளது.
சிறையில் இருந்து சசிகலா எவ்வளவோ எடுத்துக்கூறியும் திவாகரனும் தினகரனும் கேட்பதாக இல்லை. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி தமிழக அரசியல் களத்தை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்.
அலுவலகம் திறப்பு
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த திவாகரன், அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவோம் என கூறியிருந்தார். இந்நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் அலுவலகத்தை திவாகரன் திறந்து வைத்தார்.
புத்துயிர் தந்துள்ளேன்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்கள் என்று அறிவித்தார். தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் தந்துள்ளேன் என்றும் திவாகரன் கூறினார்.
அழைப்பு விடுக்கமாட்டேன்
மேலும் அம்மா அணியில் இணைய அழைப்பு விடுக்கமாட்டேன் என்றும் விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள் என்றும் திவாகரன் தெரிவித்தார். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி தொடங்கியதுபோது என்னுடைய ஆதரவாளருக்குதான் பொறுப்புகளை தந்தார் என்றும் அவர் திவாகரின் கூறினார்.
எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் செயல்பட விருப்பம் இல்லாததால் அம்மா அணி அலுவலகம் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். திவாகரன் தனி அணி மற்றும் அலுவலகத்தை திறந்துள்ளதால் அவரது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.