மக்கள் கடலாக மாறிய ஜவுளிக் கடைகள்.. தீபாவளி வியாபாரம் விறுவிறு #diwali
நெல்லையில் உள்ள ஜவுளிக் கடைகளில் தீபாவளி வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதால் மக்கள் கூட்டம் அங்கு அலை மோதுகிறது.
நெல்லை: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் நெல்லையில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதத் தொடங்கியுள்ளது.
ஏழைகள் முதல் அனைவரும் மகிழ்ச்சியாக ஆண்டுக்கு ஓருமுறை கொண்டாடும் தீபாவளி பண்டிகை வருகிற 29ம் தேதி வருகிறது. தீபாவளி அனறு புத்தாடை அணிந்தும், பட்டாசு கொளுத்தியும், பலகாரம் உண்டும் மகிழ்கின்றனர். மேலும் தங்க ஆபரணங்கள் உள்பட புதிய வீட்டு உபயோக பொருட்கள் வாங்கவும் பலர் ஆர்வம் காட்டுவர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நெல்லையில் விற்பனை களை கட்டியுள்ளது. பலருக்கும் தீபாவளி போனஸ் போடப்பட்டுள்ளதால் அனைத்துத் தரப்பு மக்களும் தீபாவளியை கொண்டாட கடைசி கட்ட ஆயத்த ஆடைகளை வாங்குவதற்காக கடை வீதிகளுக்கு வந்து குவிய தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான தையல் கடைகள் தீபாவளி ஆர்டர் பெறுவதை நிறுத்தி விட்டதால் ரெடிமேடு ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரெடிமேடு கடைகளில் போதிய வியாபாரம் இல்லாமல் இருந்ததாம். தற்போது ரெடிமேடு கடைகளிலும் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது.
நெல்லை டவுன் ரத வீதிகள் மற்றும் வண்ணார்பேட்டை பாளை மார்கெட் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் தீபாவளி கடைகள் முளைத்துள்ளன. இங்கு ஜவுளி வாங்க ஏழை மற்றும் நடுந்தர மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப குறைந்த விலையில் சேலைகள், சட்டைகள் நைட்டிகள், சுடிதார் ஆயிட்டங்கள், 12 வளையல்கள் ரூ.10க்கும், 2 ஜோடி கம்மல் ரூ.20க்கும், நெயில் பாலிஷ், மருதாணி போன்றவை ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தத்தில் மக்கள் தீபாவளியை தடபுடலாக வரவேற்க அனைத்து வழிகளிலும் களம் குதித்து விட்டனர்.