தீபாவளி... ஆடைகள் அணிகலன்கள் வாங்க கடுகு போட்டாலும் கீழே விழாத கூட்டம்... யம்மாடியோவ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணி மணிகள், அணிகலன்கள் வாங்க தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலைமோதியது.
சென்னை: தீப ஒளி பண்டிகையை முன்னிட்டு உடைகள், அணிகலன்கள் வாங்க சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தில் கடுகு போட்டாலும் கீழே விழாத அளவுக்கு அடர்த்தியான கூட்டமாக உள்ளது.
தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், ஆடைகளுக்கு ஏற்ற அணிகலன்கள், பட்டாசுகள், இனிப்புகள், பலகாரங்கள்தான் மிகவும் முக்கியமானவை. அந்தந்த மாவட்டங்களுக்கு கேற்ப காலம் காலமாக சில கடைகளில் மக்கள் பொருள்களை வாங்குவது வழக்கம்.
சென்னையை பொருத்தவரை ஷாப்பிங் என்றால் அது ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் ஆகியவைதான். இங்கு அனைத்து நாள்களிலும் கூட்டம் நிரம்பி வழியும்.
ரங்கநாதன் தெரு
தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு மிகவும் பிரசித்து பெற்ற கடை ஒன்றும் உள்ளது. இந்த தெருவில் குண்டூசி முதல் கொண்டை ஊசி வரையும், நெத்திச் சுட்டி முதல் காலுக்கு போடும் கொலுசு வரையிலும், செருப்பு, உள்ளாடைகள், பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன.
இன்னொரு கடையில்
ஒரு கடையில் நாம் விரும்பும் பொருள்கள் இல்லாவிட்டால் இன்னொரு கடைக்கு செல்லலாம். அங்கு இல்லாவிட்டால் இன்னொரு கடை என கடைகள் ஏராளம் உண்டு. இதுபோதாகுறைக்கு தெருவோர கடைகளும் உண்டு. இந்த தெருவோர கடைகளில் மக்கள் அடித்து பேரம் பேசி தாங்கள் விரும்பிய துணி, அணிகலன்களை குறைந்த விலையில் வாங்குவர்.
தீபாவளி, பொங்கல்
சாதாரண நாள்களிலும் சனி, ஞாயிறுகளிலும் ஏராளமானோர் கூடுவர். மேலும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து விதமான பண்டிகை காலங்களிலும் இங்கு கூட்டம் அலைமோதும். மேலும் வெளியூர்களில் இருந்தும் இங்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம். பண்டிகை மட்டுமல்லாமல் வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும் மக்கள் ஜவுளிகளை இங்குதான் வாங்குகின்றனர்.
அப்பப்பா என்னா கூட்டம்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரிருந்தே மக்கள் துணி மணிகளை வாங்கி வருகின்றனர். நாளை பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் பணி நிமித்தம் காரணமாகவும், கூட்டம் அதிகம் இருப்பதாலும் நாள்களை தள்ளி போட்டுக் கொண்டே இன்று வாங்க குவிந்துள்ளனர். இந்த கூட்டத்தில் கடுகு போட்டாலும் கீழே விழாத அளவுக்கு கூட்டம் கூடியுள்ளது. வார நாளான செவ்வாய்க்கிழமையே இப்படி என்றால் வார இறுதி நாள்களில் எப்படி இருக்கும் என கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.
கேமராக்கள் பொருத்தம்
கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் உள்ளே புகுந்து விடுவர் என்பதால் போலீஸார் 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளனர். கடைகளின் வாசலிலும், மக்கள் முக்கிய இடங்களிலும் இந்த கேமராக்கள் வைக்கப்பட்டு அவற்றை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வருகின்றனர்.