தீபாவளி ரயில் டிக்கெட் ரிசர்வேசன்... 5 நிமிடத்தில் காலி - வரிசையில் நின்றவர்கள் ஏமாற்றம்
சென்னை: சென்னை: தீபாவளி பண்டிகைக்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தது. அக்டோபர் மாதம் 29ம் தேதி தீபாவளி விடுமுறைக்கு செல்வதற்கு ஏற்ப ரயில் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. அதிகாலை முதல் வரிசையில் நின்று காத்திருந்த பலர் ஏமாற்றமடைந்தனர்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதையடுத்து அக்டோபர் 27ம் தேதி வியாழக்கிழமை பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக அதிகாலை முதலே பயணிகள் வந்து குவிந்தனர். அங்கேயே காத்திருந்த அவர்கள் காலை 8 மணிக்கு வரிசையில் நிற்க தொடங்கினர். ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.
5 நிமிடங்களில் முடிந்தது
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, முத்துநகர், பொதிகை, பாண்டியன், ராமேசுவரம், ஆகிய தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.
ஆன்லைன் முன்பதிவு
பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் முன்பதிவு செய்ததால் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் வரிசையில் முதலில் நின்ற 10 நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. பெரும்பாலான பயணிகளுக்கு காத்திருப்போர் பட்டியலில்தான் டிக்கெட் கிடைத்தது.
பயணிகள் ஏமாற்றம்
நேரம் செல்ல, செல்ல அனைத்து ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கையும் அதிகரித்தது. டிக்கெட் கிடைக்காத பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 90 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக டிக்கெட் கவுண்ட்டர்களில் வந்து பதிவு செய்யும் எங்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர்.
அக்டோபர் 29
தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அக்டோபர் 28ம்தேதி பயணம் செய்வதற்காக டிக்கெட்டுகள் நாளை ரிசர்வேசன் செய்யப்பட உள்ளது.