விடிந்தால் தீபாவளி... விடாது பெய்யும் மழை... சிறுவர்களின் பட்டாசுக் கனவு "டமால்"!
சென்னை: விடிந்தால் தீபாவளி. ஆனால் உஸ் உஸ் என்ற காற்றுச் சத்தத்தையும், மழையையும் தவிர பட்டாசுச் சத்தம் தப்பித்தவறிக் கூட காதில் விழவில்லை.
வடகிழக்கு பருவமழை கடந்த 28-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி உள்ளது. இந்த புயல் சின்னம் காரைக்கால்-சென்னை இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
சாலைகளில் வெள்ளம்...
தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளமென ஓடுகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
தீபாவளி... தீபாவளி தான்
இந்த சூழ்நிலையில் நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புதிய ஆடைகள், பலகாரங்கள், பட்டாசுகள், புதிய திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், சொந்த ஊர் சென்று உறவினர்களைச் சந்தித்தல் என ஊரே திருவிழா கோலம் பூண்டுவிடும்.
ஷாப்பிங் கனவு பனால்...
ஆனால், இந்தத் தீபாவளி அப்படி இருக்குமா என்பது சந்தேகமாகத் தான் இருக்கிறது. காரணம் மழை. விடாமல் பெய்து வரும் மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். பிறகெங்கே ஷாப்பிங் போவது, ஊருக்குப் புறப்படுவது. கடைசி நேரத்தில் ஷாப்பிங் செல்லலாம் என நினைத்திருந்த பலரது கனவு பனால் ஆகிவிட்டது.
பட்டாசு ஆசையும் டமால்...
மழை காரணமாக பட்டாசு கடைகளும் வாங்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிக்கிடக்கிறது. ஏற்கனவே பட்டாசு வாங்கியவர்களும், மழையால் பட்டாசுகளை அட்டைப்பெட்டியில் வைத்தே அழகு பார்த்து வருகின்றனர்.
கொண்டாட்டத்தைத் தூக்கிச் சென்ற மழை....
அப்படியே பட்டாசுக்களை வெடிக்க வெளியில் வந்தாலும் பட்டாசுகள் நமத்து விடுகின்றன என்பது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கவலை. மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும், நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையிலும் மழை பலரது கொண்டாட்டங்களை தூக்கிச் சென்று விட்டது.