தீபாவளி ஷாப்பிங்... தி நகர், வேளச்சேரி, வண்ணாரப்பேட்டையில் குவியும் கூட்டம் - கண்காணிக்கும் போலீஸ்
தீபாவளிக்காக சென்னை கடை வீதிகளில் பொருட்கள் வாங்குபவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை: தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை தி.நகர், வேளச்சேரி, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், உள்ளிட்ட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் 250 கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. எனவே பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வணிக பகுதியான தியாகராயநகரில் புத்தாடைகள், நகைகள் உள்பட பொருட்களை வாங்குவதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
ஜவுளி, பாத்திரங்கள், நகைகள் என எல்லாவற்றுக்கும் சென்னையில் மக்கள் நாடும் முதல் இடம் தி நகர்தான். இப்போது வேளச்சேரி, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் என கடைகள் தனித்தனியாக ஏரியாக்களில் பிரிந்து விட்டாலும் தி. நகருக்கு ஷாப்பிங் சென்று வந்தது போல இருக்குமா என்பதே பலரது கருத்து.
எங்கும் மக்கள் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும் மக்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு தி நகர் பகுதியின் முக்கிய சாலைகளில் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தும் சாலையில் நடக்கக் கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது.
திணறிய காவல்துறையினர்
ரங்கநாதன் தெரு, தெற்கு உஸ்மான் சாலை, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். நேற்று மட்டும் ஒரேநாளில் பல லட்சம் மக்கள் திநகரில் குவிந்ததாக போலீசார் தெரிவித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
மாறு வேடத்தில் போலீஸ்
கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து பிக்பாக்கெட், செயின் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருடர்களை பிடிக்க போலீசார் மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனர். ஒலி பெருக்கி மூலம் உங்களுடைய குழந்தைகள் பத்திரம்; பொருட்கள் பத்திரம் என பொதுமக்களை போலீசார் உஷார்படுத்தி வருகின்றனர்.
அதி நவீன கேமரா மூலம் கண்காணிப்பு
கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக தியாகராயநகரில் ஏராளமான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அமைத்து தொலை நோக்கு கருவிகள் மூலமும் காவல்துறையினா் கண்காணித்து வருகின்றனர்.
காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரிக்கை
தி. நகர் சாலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 3 காவல் உதவி மையங்கள், 5 கண்காணிப்பு கோபுரங்கள் செயல்பட உள்ளன. குற்றங்களை தடுக்க சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.
புரசைவாக்கத்தில் குவிந்த கூட்டம்
கடை வீதிகள் அதிகம் நிறைந்த புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகமாக கூடுவதால் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால், அதைதடுக்க ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.