அரசு அறிவித்த 11,959 தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் இயக்கம்
சென்னை: தீபாவளிப் பண்டிகைக்காக தமிழக அரசு அறிவித்த சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
வரும் செவ்வாய்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று முதலே சொந்த ஊர் செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர்.
மக்களின் வசதிக்காக தமிழக அரசு 11,959 சிறப்புப் பேருந்துகளை அறிவித்தது. இந்தப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் நவம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் மீண்டும் நவம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும் இயக்கப்பட உள்ளன.
கடந்த 4ம் தேதியே இந்தப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. இதற்கென கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 25 கூடுதல் முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இது தவிர கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலமும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
அதன்படி, முதல் நாளான இன்று, கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு 1106 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து 1554 கூடுதல் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
புகார் அளிக்கலாம்:
இதற்கிடையே தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு நடந்தால், அது குறித்து பொதுமக்கள் தொலைபேசியில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கென 044-2479 4709, 044 - 2674 4445 மற்றும் 044- 2474 9001 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.