தீபாவளி சிறப்பு பேருந்துகள் அதிகரிப்பு... 2012ம் ஆண்டு வருவாய் சாதனை முறியடிக்கப்படுமா?
சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்தாண்டு போக்குவரத்துக் கழகம் அதிகளவில் சிறப்புப் பேருந்துகளை இயக்கியுள்ளது. இதனால், கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகளவு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நேற்று தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்று, திரும்பும் மக்களின் வசதிக்காக தமிழக அரசு 11959 சிறப்பு பேருந்துகளை அறிவித்திருந்தது.
கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு இயக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் வருவாயும் அதிகரித்து சாதனை படைக்கும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீபாவளி சிறப்புப் பேருந்துகள்...
முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தீபாவளி சமயத்தில் தமிழக அரசு அதிகளவில் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வசூலில் சாதனை...
கடந்த 2012ம் ஆண்டு தீபாவளி சிறப்புப் பேருந்துகள் மூலம் 87.37 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்த போதும் வருவாய் அதிகரிக்கவில்லை.
முறியடிக்கப்படாத சாதனை...
2013ம் ஆண்டு கூடுதலாக 3,526 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதும், வருவாயில் 44 லட்ச ரூபாய் சரிவே கிடைத்தது. இதேபோல், கடந்தாண்டு 10,499 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு 83.96 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இதனால், 2012ம் ஆண்டு தீபாவளி சிறப்புப் பேருந்துகள் மூலம் கிடைத்த சாதனை வருவாய் முறியடிக்கப் படாமலேயே இருந்து வருகிறது.
எதிர்பார்ப்பு...
இந்த சூழ்நிலையில், இந்தாண்டு தீபாவளியையொட்டி அரசு 11 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மழை காரணமாக இந்தப் பேருந்துகளில் அவ்வளவாக கூட்டமில்லை. ஆனபோதும், 2012ம் ஆண்டு வருவாய் சாதனை இந்தாண்டு முறியடிக்கப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.