தித்திக்கும் தீபாவளி .... இனிப்புகள் ஏராளம்... சுவைத்து மகிழ தாராளம்!
சென்னை: தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித ஆர்பரிக்கும் கொண்டாட்டம். ஏனெனில் அன்றைய தினத்தில் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடுவோம். இதில் இனிப்புகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள், மற்றும் பரிசு பொருட்கள் வாங்குவதற்கு தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். தீபாவளி நெருங்கி விட்டதன் நினைவூட்டல் இது. நவீன ஃபேஷன் ஆடைகளைத் தேடி படையெடுக்கும் இளம் தலைமுறையினரின் கூட்டம் ஒரு பக்கம். சேலை, குர்தா, சுடிதார் என புதிய ரக, விழாக்கால ஆடைகளை தேடி அலையும் மகளிர் கூட்டம் இன்னொரு பக்கம். வித்தியாசமான வானவேடிகளைத் தேடி ஓடும் குழந்தைகள் ஒரு பக்கம்.
கலாச்சார இனிப்பு
இதற்கிடையே, தீபாவளி என்றாலே நம் கலாச்சாரத்தில் இனிப்புகளுக்கு பிரதான இடமுண்டு. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வகை வகையான
இனிப்புப் பண்டங்கள் சந்தையில் உள்ள கடைகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளன. இனிப்புப் பலகாரங்களின் விற்பனை இப்போதே அமோகமாகத் துவங்கிவிட்டது.
அடுக்களையில் மூக்கைத் துளைத்த வாசம்
முன்பெல்லாம் தீபாவளித் துவங்க ஒரு மாதம் இருக்கும் முன்பே வீட்டு அடுக்களைகளில் இருந்து இனிப்பு வகைகளின் வாசம் மூக்கைத் துளைக்கும். சிறுவர்களோடு பெரியவர்களும் இனைந்து போட்டி போட்டுக்கொண்டு பலகாரத்தை சுவைத்து மகிழவார்கள். ஆனால் தற்போது பெரும்பாலும் கடைகளில் விற்பனையாகும் இனிப்புகளை வாங்குவதே ஃபேஷன் ஆகிவிட்டது.
நேரமில்லையே
இதற்கு நேரமின்மை காரணமாக ஒரு பக்கம் கூறப்பட்டாலும், கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை அறவே இல்லாமல் போனதுவே இதற்கு முக்கிய காரணமாகும்.
அந்த காலத்தில் பண்டிகை நாள் வரும்போது கூட்டுக் குடும்பங்களில் அனைவரும் ஒன்று கூடி பலகாரங்களை போட்டி போட்டி போட்டு செய்தனர். ஆனால் இன்றோ
அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
விதம் விதமான இனிப்புகள்
பெருகி வரும் தேவைகளுக்கு ஏற்றார் போல கடைகளிலும் பல்வேறு வகையான இனிப்புகள் செய்து விற்கப்படுகின்றது. லட்டு,மைசூர்பா, ஜாங்கிரி போன்ற வழக்கமான இனிப்புகள் மட்டுமின்றி கேசர் பட்டி, பஸ்தா கூழ், காஜூர் பிஸ்தா ரோல், டிரை ஃபுரூட் ஹனி டியு, காஜூர் ஜாமூன், கேசர் பாதாம் பிஸ்தா ரோல் போன்ற பலவகையான புதிய வித்தியாசமான இனிப்பு வகைகளும் இந்த தீபாவளிக்கு கடைகளை அலங்கரிக்கும் பாப்புலர் இனிப்பு வகைகளாக உள்ளன.
முறுக்கு, சீடை, தட்டை
பாரம்பரியமாக பண்டிகை நாட்களின் போது வீடுகளில் செய்யப்படும் முறுக்கு, சீடை, தட்டை போன்ற கார வகைகள் இப்போது கடைகளில் ரெடிமேடாகவே கிடைக்கிறது.
நமது தேவைக்கு ஏற்ப பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பண்டிகை காலங்களில் அவசர அவசரமாக செய்யப்படும் இனிப்புகள்
தரமானதாக இருக்குமா என்று வாடிக்கையாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
அச்சமின்றி வாங்க
இதற்கு பதிலளித்துள்ள தீ நகரில் இயங்கி வரும் பிரபல இனிப்புக் கடையின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, வாடிக்கையாளர்கள் இனிப்பு வகைகளின் தரம் குறித்து
அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்கிறார், இது குறித்து அவர் கூறும்போது, பல்வேறு கட்ட கடுமையான தர பரிசோதனைகளுக்குப் பிறகுதான் இந்த இனிப்பு பண்டங்கள்
தயார் செய்யப்பட்டு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்றார்.
ஹனிமூன் பேக் ரெடி பாஸ்!
இந்த தீபாவளிக்கு கூடுதல் சிறப்பாக புதுமண தம்பதிகளுக்காக ஹனிமூன் பேக், குழந்தைகளுக்காக கிஃபட் பேக் என பல விதங்களில் இனிப்புகள் விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ளன. இது நாவிற்கு சுவையூட்டுவது மட்டுமின்றி, இதனை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதன் மூலம் உறவுகளுக்கும் வலு சேர்க்க வருகிறது