மாற்றுக் கருத்துடையவர்களும் மதிக்கும் திறமை கொண்டவர் சோ… கி. வீரமணி புகழாரம்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு கி. வீரமணி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமியின் மறைவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, மாற்றுக் கருததுடையவர்களும் மதிக்கும் திறன் கொண்டவர் சோ என்று கி. வீரமணி அவருக்கு புகழாரம் சூட்டினார்.
சோ மிக வெகுளியாக எதனையும் சொல்லக் கூடியவர். கடுமையான கருத்துக்களைக் கூட வேகமாக கூறிவிட்டு, பின்னர் நகைச்சுவையாக மாற்றிக் கொள்ளும் திறன் மூலம் வேகத்தை அவர் குறைப்பார். சில நேரங்களில் கடும் மருந்தினை கொடுத்துவிட்டு பக்க விளைவுகள் வராமல் இருக்க இன்னொரு மருந்தை கொடுப்பது போல.
நெருக்கடி காலத்தை நேரடியாக அவர் எதிர்த்தவர் என்பதுதான் நாங்கள் விரும்பக் கூடிய ஒன்றாகும். அந்த வகையில் நண்பர் சோவை சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அண்மைக் காலத்தில்தான் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பார்க்க முடியாமல் போய்விட்டது.
வெளிநாட்டிற்கு சென்றாவது அவருக்கு சிகிச்சை கொடுத்து வாருங்கள் என்று அவரின் உதவியாளரிடம் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால் அதனை சோ விரும்பவில்லை. பிடிவாதமாக இங்கேயே இருந்து இந்த மண்ணிலே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.
எவ்வளவு கடுமையாக பேசினாலும், அவரது கொள்கைகளை அவரும் விட்டுக் கொடுக்கமாட்டார். நாங்களும் விட்டுக் கொடுக்க மாட்டார். நீங்களும் நானும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். ஏன்னென்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு எழுத நம் இருவருக்கும் ஆள் வேண்டுமே என்று நான் சோவிடம் அடிக்கடி சொல்வதுண்டு.
துக்ளக் பத்திரிகை சினிமாவை அடிப்படையாகக் கொண்டோ சோதிடத்தை அடிப்படையாகக் கொண்டோ நடக்காத அரசியல் விமர்சனங்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடிய தனித்தன்மையான பத்திரிகையாகும். அப்படி ஒரு பத்திரிகையை நடத்துவது அவ்வளவு எளிமையானதும் அல்ல. அதனை சோ செய்தார். அதன் மூலம் தனித்தன்மையை காப்பாற்றினார்.
எவ்வளவு கருத்து வேறுபாடு உடையவர்களும் அவரை மதிப்பார்கள். அப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர். அந்த திறமை இன்று ஓய்வெடுத்துக் கொண்டது என்று கி. வீரமணி கூறினார்.