எரியும் நெருப்பில் நெய் ஊற்றும் வேலையில் தமிழக அரசு...மது விலக்கு கொள்கைதான் என்ன? கி.வீரமணி கேள்வி
சென்னை : மதுவிலக்கு பிரச்சினையில் தமிழக அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வைகோ உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள வழக்கையும் வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை கூறியுள்ளதாவது:
முழு மதுவிலக்குத் தேவை என்ற உணர்வு கட்சிகளைத் தாண்டி, தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பி விட்டது. பிறருடைய தூண்டுதல்களின்றித் தன்னிச்சையாகவே இந்தவுணர்வு வெடித்துக் கிளம்பி விட்டது. காந்தியவாதியான பெரியவர்சசிபெருமாள் அவர்கள் நடத்திய போராட்டமும், எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அவரின் மரணமும் மது விலக்குக் கோரிக்கையை மேலும் கூர்மைப்படுத்தி விட்டது.
தமிழ் நாடே ஒருமுகமாக ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்குப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டுவிட்டன; இது ஓர் ஆரோக்கியமான வரவேற்கத்தக்க நிலை என்பதில் அய்யமில்லை.
இதனை அரசியல்படுத்தாமல் மது விலக்குக் கொள்கையை முன்னெடுத்தால் விரைந்த பலன் கிட்டும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை. இந்த அளவு தமிழ்நாடே ஒருமுகமாக இப்பிரச்சினையில் எழுந்து நிற்கும் நிலையில், ஆளும் தரப்பின் கொள்கை முடிவு இந்தப் பிரச்சினையில் என்ன என்பது கூட இது வரை அறிவிக்கப்படாதது ஏன் என்பது அறிவார்ந்த கேள்வியாகும்.
அண்டை மாநிலமான காங்கிரஸ் ஆளும் கேரள மாநிலத்தில் மது விலக்கினை முழு அளவில் செயல்படுத்த படிப்படியான வகையில் மது விற்பனையையும் குறைக்கும் அந்த வகையிலாவது ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
ஆனால், தமிழ்நாடு அரசின் செயல்பாட்டைப் பார்க்கும்போது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற போக்கில் இருப்பது வருந்தத்தக்கதாகும்.
கலிங்கப்பட்டி போராட்டமும் அரசின் அணுகுமுறையும் குறிப்பாக கலிங்கப்பட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடந்து வரும் போக்கு, மேற்கொள்ளும் அணுகுமுறை அதிர்ச்சியை அளிக்கிறது.
அறிவிப்புக் கொடுக்கப்பட்டுப் பிறகு போராட்டம் நடத்தப்படுகையில், சகோதரர் வைகோ உட்பட முக்கியப் பொறுப்பாளர்களிடம் மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை அதிகாரிகளோ பேச்சு வார்த்தை நடத்த முன் வந்திருக்க வேண்டாமா? மாறாக அரசுத் துறையின் குறிப்பாக காவல்துறையினரின் நடைமுறை, போராட்ட உணர்வைத் தூண்டுவதாக அல்லவோ இருக்கிறது?
போராட்ட நடவடிக்கைகள் தொடரும் கால கட்டத்திலாவது சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை (தற்காலிகமாவது) மூடி இருக்க வேண்டாமா? மாறாக உள்ளூர்த் தோழர்கள் யாரும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்குச் செல்ல முன் வராத நிலையில், வெளியூர்களிலிருந்து நான்கு பேர்களை ஏற்பாடு செய்து வரவழைத்து, அந்தக்கடையில் மது வாங்க ஏற்பாடு செய்வது எந்த வகையில் ஒழுங்கு முறையான நடை முறை?
இது அரசு செய்யக் கூடிய செயலா? இத்தகு செயல்பாடு போராட்டக்காரர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்? கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சுகள் நடைபெற்றுள்ளன. கடுமையான அளவு தடியடிகளும் நடத்தப்பட்டுள்ளன. அதோடு நிற்கவில்லை. வைகோ உட்பட 52 பேர்கள் மீது கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
எரியும் நெருப்பில் நெய் ஊற்றும் வேலையில் தமிழ்நாடு அரசு தன்னை அறியாமலேயே ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது என்று எச்சரிக்கிறோம். வழக்குகளை விலக்கிக் கொள்வதோடு மது விலக்குக் கொள்கையில் அரசின் நிலைப்பாட்டை உடனே தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், மது விலக்கை அமல்படுத்த தேவையான அடிப்படை வேலையில் இறங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.