தி.க.- சிவசேனா மோதல்: போலீஸ் தடியடி, நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் நேற்று மாலை தி.க-சிவசேனா தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர்.
திராவிட கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தினால் திங்கட்கிழமை இரவில் இருந்தே, சென்னை வேப்பேரி பெரியார் திடல் உள்ள ஈ.வி.கே.சம்பத் சாலையில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர்.
செவ்வாய்கிழமை காலையிலும் அந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் இருந்தனர். தாலி அகற்றும் போராட்டம் அமைதியாக பெரியார் திடல் வளாகத்தில் நடந்து முடிந்தது.
ஆனால் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியதை கண்டிக்கும் வகையில் இந்து அமைப்பினர் வேப்பேரி பகுதிக்கு வந்து கண்டன போராட்டம் நடத்த முற்பட்டபடி இருந்தனர். வந்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தபடி இருந்தனர்.
மாலையில் மோதல்
நேற்று மாலை 3 மணியளவில் சிவசேனா கட்சியை சேர்ந்த சிலர் பெரியார் திடலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் மாலை 3.30 மணி அளவில் சிவசேனா தொண்டர்கள் 4 பேர் ஒரு ஆட்டோவில் கோஷம் போட்டபடி ஈ.வி.கே.சம்பத் சாலையில் வந்தனர். அவர்கள் பெரியார் திடல் வாசல் பகுதியில் சிறிது நேரம் ஆட்டோவில் இருந்தபடியே ஜெய் காளி, ஓம் காளி என்று கோஷம் போட்டபடி நின்றனர். உடனே பெரியார் திடலுக்குள் திரண்டு இருந்த திராவிட கழக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தபடி வாசலுக்கு வந்தனர். சிவசேனா தொண்டர்களை விரட்டினார்கள். அவர்கள் ஆட்டோவை கமிஷனர் அலுவலகம் எதிரில் வந்து நிறுத்தினார்கள்.
போலீஸ் தடியடி
அப்போது திராவிட கழக தொண்டர்களுக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. நிலமை மோசமானதால் அங்கு காவலுக்கு நின்ற போலீசார் மோதலை தடுத்தனர். அப்போது கூடுதல் துணை கமிஷனர் அலிபாஷா தள்ளப்பட்டார். போலீசார் மீதும் உருட்டுக்கட்டை அடி விழுந்தது.
போக்குவரத்து நிறுத்தம்
சிவசேனா தொண்டர்கள் 4 பேரும் மோதலில் வசமாக சிக்கினார்கள். அவர்களை காப்பாற்ற போலீசார் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. திராவிட கழக தொண்டர் சுரேஷ் என்பவரும் அடிபட்டார்.
காயம் அடைந்த சிவசேனாவினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதனால் ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
நாட்டுவெடிகுண்டு
இதனிடையே வேப்பேரி காவல்நிலையம் அருகே நின்றிருந்த சிவசேனாவினரின் ஆட்டோவை போலீசார் சோதனை நடத்தினர். அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளையும், பயங்கர ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.