ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவு: தி.க. அறிவிப்பு!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு அளிப்பதாக திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.
தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத் மாநில பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடைபெற இருக்கும் சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்ட இடைத் தேர்தலாகும். இடைத்தேர்தல் என்பதைவிட கடைத் தேர்தல் என்று சொல்ல வேண்டும். அதாவது கடையில் சென்று பொருள்களை வாங்குவது போல வாக்குகள் வாங்கும் தேர்தல் என்று பொருள்.
மற்ற கட்சிகள் இந்த இடைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் தனது ஜனநாய கடமையை நிறைவேற்ற இடதுசாரிகள் முன் வந்திருப்பதை திராவிடர் கழகம் வரவேற்கிறது; ஆதரிக்கிறது.
மதச் சார்பின்மை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் இடதுசாரிகள் நம்மோடு நெருக்கமாக இருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் அவர்களை ஆதரிப்பது என்பதை அறிவிக்கிறோம்.
மத்தியில் ஆளும் மதவாத பி.ஜே.பி. ஆட்சி, மதவாத கொள்கைகளை தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. வெளிப்படையாக எதிர்ப்பதில்லை. மாறாக பல்வேறு பிரச்சனைகளிலும் மத்திய மதவாத பி.ஜே.பி. அரசுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நமது எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும். இந்த நேரத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளும் தங்களின் முடிவினை மறுபரிசீலனை செய்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் அவர்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு கி. வீரமணி கூறினார்.