விஜயகாந்த் பேசி முடித்து விட்டுப் போனதும் தீக்குளித்த தேமுதிக தொண்டர்
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்ட தேமுதிக நிலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிந்து விஜயகாந்த உள்ளிட்டோர் கிளம்பிச் சென்ற பின்னர் தேமுதிக தொண்டர் ஒருவர் தீக்குளித்து விட்டார்.
நிகழ்ச்சி முடிந்து சென்னைக்குத் திரும்பி விட்ட விஜயகாந்த் இந்த செய்தி கேட்டதும் தனது மனைவியுடன் மீண்டும் மதுரை விரைந்தார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொண்டரைப் பார்த்து நலம் விசாரித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக மேற்கு மாவட்ட சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா கலந்துகொண்டனர். இதில் கிழக்கு, மேற்கு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
விழாவின் இறுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த தேமுதிக தொண்டர் கஜேந்திரபிரபு என்பவர் திடீரென தீக்குளித்தார். அவரை உடனே அங்கிருந்த தொண்டர்கள் பழனி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
அப்போது கஜேந்திரபாபு அங்கு தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் கூறுகையில், வார்டு செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த தன்னை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியதால் மனம் உடைந்து இந்த முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.
கஜேந்திரபாபு தீக்குளித்த விஷயம் விஜயகாந்த்துக்குத் தெரிவிக்கப்படவில்லையாம். சென்னைக்குக் கிளம்பி வந்த பின்னர்தான் அவருக்கு விஷயம் தெரிந்துள்ளது. இதையடுத்து மீண்டும் விஜயகாந்த் தனது மனைவியுடன் விமானம் மூலமாக மதுரை விரைந்தார். அங்கு கட்சித் தொண்டரைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
தீக்குளித்த கஜேந்திரபாபுவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அப்பா தீக்குளித்து தொடர்பாக இருவரும் கவலையுடன் உள்ளனர். ஆனால் கஜேந்திரபாபுவுக்குத்தான் தனது பிள்ளைகள் குறித்த கவலையே இல்லை. இருந்திருந்தால்தான் தீக்குளித்திருக்கவே மாட்டாரே!