தேமுதிக எம்.எல்.ஏ.சந்திரகுமார் உருவப் பொம்மையை எரித்து போராட்டம் !
புதுக்கோட்டை: தேமுதிக மற்றும் அதன் தலைவர் விஜயகாந்த் பற்றி அவதூறாக பேசியதாக எம்எல்ஏ சந்திரகுமாரின் உருவப் பொம்மையை எரித்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக இணைந்ததால் தேமுதிகவில் பெரும் அதிருப்தி வெடித்துள்ளது. நாளை மதியத்திற்குள் திமுகவோடு கூட்டணி வைக்கும் முடிவை தேமுதிக அறிவிக்க வேண்டும் என்று கட்சி கொறடாவும், கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் எம்.எல்.ஏ தலைமையிலான 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்த்துக்கு கெடு விதித்தனர். அப்போது தேமுதிக மீதும், அதன் தலைவர் விஜய்காந்த் மீதும் கடுமையான விமர்சித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டது. பின்னர் சில மணி நேரங்களிலே அந்த பொறுப்புகளுக்கு புதியவர்களையும் நியமித்தார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.
இந்நிலையில், திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டே இத்தகைய செயல்களில் சந்திரகுமார் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை மாலையில் தேமுதிக நகர நிர்வாகி பரஞ்சோதி கண்டன முழக்கம் எழுப்பினர். மேலும், சந்திரகுமாரின் உருவப் பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.