தேமுதிக முகாம் தேஞ்சு போச்சே... விருப்ப மனுக்கள் வாங்க ஆளில்லையோ? நாலே நாளில் காத்தாடுது!
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்து 4 நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் கட்சி அலுவலகத்தில் காற்றாடுகிறது. யாருடன் கூட்டணி என்று இன்னமும் கட்சித்தலைவர் விஜயகாந்த் முடிவு செய்யவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடவும், விருப்பமனுக்களைப் பெறவும் தேமுதிகவினர் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறும் நிகழ்வு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை தொடங்கியது. அப்போது ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை அளித்தனர்.
முதல் விருப்ப மனுவை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி முருகேந்திரன் என்னும் பெண் அளித்தார். திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.வேட்பு மனுக்களை தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ்
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோருக்காக ஏராளமானவர்கள் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட பொதுத் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் வசூலிக்கப்பட்டது.
திருநங்கை ராதிகா
சேலத்தை சேர்ந்த திருநங்கை ராதிகா தேமுதிக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தலைவர் விஜயகாந்துக்காக நான் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தேன். குடும்பம் ஏதுமின்றி தனி ஆளாகத்தான் உள்ளேன். எனவே, சேலம் மேற்கு தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.
கூட்டம் இல்லையே
14.02.2016 மாலை ஐந்து மணிவரை விருப்பமனுவை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம் என தேமுதிக அறிவித்துள்ளது. ஆனால் முதல் இரண்டு நாட்களில் இருந்த கூட்டத்தைப் போல நான்காம் நாளில் கூட்டம் இல்லை. ஒருவேளை வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த தேமுதிகவினர் விருப்ப மனுவை வாங்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
|
நேர்காணலில் இப்படி கேட்டால்
விருப்பமனு வாங்கினால் நேர்காணலை சந்திக்க வேண்டும். ஒரு வேளை 'நானே ராஜா நானே மந்திரி' படத்தில் கேட்பது போல விஜயகாந்த் கேள்வி கேட்டால் என்ன செய்வது என்றும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகளை போட்டு வருகின்றனர் டுவிட்டர்வாசிகள்.
இலக்கை எட்டமுடியுமா?
அதிமுக, திமுகவிற்கு நிகராக விருப்பமனு விற்பனையில் மாஸ் காட்டவேண்டும் என்று நினைத்தனர் தேமுதிக நிர்வாகிகள். அதிமுகவில் 26ஆயிரம் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேமுதிகவில் நான்கு நாட்களிலேயே விருப்ப மனு அளிக்க வரும் கூட்டம் குறைந்து போனதால் நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.