ஞாநி ஆட்சேபனை நிராகரிப்பு.. ஆலந்தூர் தேமுதிக வேட்பாளர் மனு ஏற்பு
ஆம் ஆதமி வேட்பாளரான பத்திரிக்கையாளர் ஞாநி முன்னதாக தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜின் வேட்புமனு குறித்து சில ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் ஏப்ரல் 24ம் தேதி ஆலந்தூர் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் போட்டியி, அதிமுக வி.என்.பி.வெங்கட்ராமன், திமுக ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத், தேமுதிக ஏ.எம்.காமராஜ், ஆம் ஆத்மி ஞாநி சங்கரன் மற்றும் காந்தியவாதி சசிபெருமாள் உள்பட 18 பேர் 23 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் நரேன்குமார் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜாராம் மனுக்களை பரிசீலனை செய்தார்.
அப்போது அதிமுக, திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தேமுதிக மனு பரிசீலனைக்கு வந்தபோது, ஆம் ஆத்மி வேட்பாளரான ஞாநி, ஒரு ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், தேமுதிக வேட்பாளர் காமராஜ் கடந்த 2011-ம் ஆண்டு விருகம்பாக்கம் பகுதியில் மாநகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது அவரது மனைவி பெயரில் வருமான வரி எதுவும் இல்லை என்றும், சொத்துகள் இல்லை என்றும் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்து இருந்தார்.
ஆனால் தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் தனது மனைவி வருமான வரி செலுத்துபவர் என்றும், 2010-ம் ஆண்டு ஒரு நிலம் வாங்கியதாகவும் காட்டி உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் கணக்கு காட்டாமல் விட்டுவிட்டார். எனவே அவரது மனுவை பரிசீலிக்க கூடாது என கூறினார்.
இதற்கு ஆதாரமாக 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது காமராஜ் காட்டிய ஆவணங்களை வழங்கினார். இதையடுத்து தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் வேட்பு மனு மீதான முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையி்ல் முழுமையான ஆய்வுக்குப் பின்னர் தேமுதிக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்தார். இதையடுத்து இங்கு தேமுதிக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
பண்ருட்டியார் தொகுதி
இந்தத் தொகுதியில் தேமுதிகவின் முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் உறுப்பினராக இருந்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்து விட்டார். மேலும் தற்போது அதிமுகவுக்கும் போய் விட்டார். இதையடுத்து ஆலந்தூருக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது.