திருமாவளவனை வீழ்த்திய திருமாவளவன்... டெபாசிட் இழந்த 3 விஜயகாந்த்கள்... குழப்பிய சுயேட்சைகள்
சென்னை: திருமாளவன், விஜயகாந்த், ஸ்டாலின் பெயர்களைக் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தி வாக்காளர்களை குழப்பியுள்ளனர் எதிர்கட்சியினர். சுயேட்சை திருமாவளவனால் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
இதேபோல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராக விஜயகாந்த் என்ற பெயரில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த தொகுதியில் 3 விஜய்காந்த்களும் டெபாசிட் இழந்தனர். இதே தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு பெயரில் சுயேட்சை வேட்பாளர் பாலு என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்த சுயேட்சை வேட்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளனர்.
தேர்தலில் மக்களை குழப்ப, பிரதான வேட்பாளர் பெயரில் இன்னொரு வேட்பாளரை நிறுத்துவதென்பது கட்சிகள் கையாளும் ஒரு யுக்தி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட, அன்புமணி பெயரில் அன்புமணியை எதிர்த்து இன்னொரு வேட்பாளர் நின்றார். ஆனால், இதுவரை இதுபோன்ற யுக்தி வாக்கு சதவீதத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்ததில்லை. ஆனால், இம்முறை ஒரு வேட்பாளரின் வெற்றியையே அது பறித்துவிட்டது.
தொல் திருமாவளவன்
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் டி. திருமாவளவன் என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தார்.
சுயேட்சை திருமாவளவன்
சுயேட்சை வேட்பாளர் திருமாவளன் 289 வாக்குகள் பெற்றுள்ளார். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக திருமாவளவனுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்க மாற்றார். சுயேட்சை வேட்பாளரை அதே பெயரில் நிறுத்தியதால் தந்திரமாக வீழ்த்தப்பட்டு உள்ளார் .
டெபாசிட் இழந்த விஜயகாந்த்
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தோல்வியடைந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு தனது டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளார். பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கை பெற்றால்தான் ஒரு வேட்பாளர் தன் டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியும்.
ஆறில் ஒரு பங்கு வாக்கு
இந்த தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் பெற்றது 34447தான். இந்த தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
சுயேச்சை விஜயகாந்த்கள்
விஜயகாந்த் பெயரில் போட்டியிட்ட இன்னொரு சுயேட்சை வேட்பாளர் அ. விஜயகாந்த் பெற்ற வாக்குகள் வெறும் 687 வாக்குகள்தான். அது போல் இன்னொரு வேட்பாளாரான ச. விஜயகாந்த் பெற்றது வெறும் 148 வாக்குகள். இந்த விஜயகாந்துகளும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
சுயேட்சை ஸ்டாலின்
அது போல் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து நின்ற சுயேட்சை ஸ்டாலின் குமார் 83 வாக்குகள் பெற்று உள்ளார். வேட்பாளர்களை வீழ்த்த எப்படி எல்லாம் தந்திரங்களை கையாளுகின்றனர் அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா.