மீண்டும் வந்துவிட்டது ராஜ்யசபா தேர்தல்.. திமுக- தேமுதிக, காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும்?
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதுவும் தேர்தல் கூட்டணி பேச்சுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுவது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு பரபரப்பாக தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக அணி மொத்தம் 5 வேட்பாளர்களை றுத்தியது. 6வது வேட்பாளராக திமுக, தேமுதிக இரண்டு கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்தியது.
தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவையும் திமுக கோரியிருந்தது. ஆனால் காங்கிரஸின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் தேமுதிகவும் வேட்பாளரை நிறுத்த படு டென்ஷனாகின கட்சிகள்.
காங். தயவில் வென்ற திமுக
கடைசியாக திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கப் போய் திமுக வேட்பாளர் கனிமொழி எளிதாக வென்றார். தேமுதிக தோல்வியைத் தழுவ நேரிட்டது.
6வது உறுப்பினர்...
அதாவது 6வது உறுப்பினர் இடத்துக்கு 2 பேர் போட்டியிட்டால் யார் கூடுதல் வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெல்வர். அதனடிப்படையில் கனிமொழி வென்றார்..
திமுக- தேமுதிக- காங். பேச்சுவார்த்தை
ஆனால் காட்சிகளும் களமும் மாறியிருக்கின்றன. தற்போது திமுக- தேமுதிக- காங்கிரஸ் மூன்றும் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
அதிமுக பலம் எப்படி?
ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தமிழக சட்டசபையில் அதிமுகவுக்கு 151 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் 7, அதிருப்தி புதிய தமிழகம் எம்.எல்.ஏ ஒருவரும் அந்த அணியில் உள்ளார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவையே ஆதரிக்கின்றன. மொத்தம் 171 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அந்த அணிக்கு இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாய்ப்பு?
இதனால் 5 எம்.பிக்களை அதிமுக அணி உறுதியாக பெற்று விடும். மேலும் தற்போது பதவிக் காலம் முடிவடையும் பட்டியலில் மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் உள்ளார். இதனால் ஒரு இடம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
திமுகவுக்கு 26 எம்.எல்.ஏக்கள்தான்..
திமுகவைப் பொறுத்தவரையில் 2 எம்.பிக்கள் பதவிக் காலம் முடிவடைகிறது. இருப்பினும் அதன் பலம் 23 எம்.எல்.ஏக்கள்தான். அதே நேரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் இப்போது திமுக அணியில்... புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏவும் திமுக ஆதரவு. ஆக இப்போதைய நிலையில் திமுகவுக்கு 26 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.
தேமுதிகவுக்கு 21 எம்.எல்.ஏக்கள்
தேமுதிகவைப் பொறுத்தவரையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போக 22 எம்.எல்.ஏக்கள்தான் இருந்தனர். இவர்களில் பண்ருட்டியார் ராஜினாமா செய்ததால் 21 எம்.எல்.ஏக்கள்தான் விஜயகாந்த் ஆதரவாளர்கள்.
காங்கிரஸ் வசம் 5 எம்.எல்.ஏக்கள்
காங்கிரஸ் கட்சி 5 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளது.
பாமகவிடம்..
பாமகவிடம் 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் கலையரசன் எம்.எல்.ஏ. அதிமுக பக்கம் போக வாய்ப்பிருக்கிறது.
இம்முறை என்ன நடக்கும்?
தற்போது 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் திமுக அணியை காங்கிரஸ், தேமுதிக ஆதரித்தால் நிச்சயம் திமுகவுக்குத்தான் வெற்றி... அல்லது 21 எம்.எல்..ஏக்களைக் கொண்டிருக்கும் விஜயகாந்தின் தேமுதிகவை காங்கிரஸ்- திமுக அணி ஆதரித்தாலும் வெற்றிதான். அல்லது தேமுதிக- திமுக இணைந்து ஆதரித்தால் காங்கிரஸ் வேட்பாளர் வெல்வார்.
தேமுதிகவுக்கா? காங்கிரஸுக்கா?
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் திமுகவிடம் இருந்து தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்க்கலாம்.
திமுக விட்டுக் கொடுக்குமா?
லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக திமுக, அந்த ஒரு இடத்தை தேமுதிகவுக்கு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க நேரிடலாம் என்றே கூறப்படுகிறது.
பாமக புறக்கணிக்கும்?
வழக்கம் போல பாமக புறக்கணிப்பு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் எந்த அணிக்கும் பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.