தனித்து போட்டியா? கூட்டணியா? சட்டசபை தேர்தலைப் போலவே 'அப்படியே அச்சுபிசகாமல்' குழப்பும் விஜயகாந்த்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடப் போவதாகவும் சட்டசபை தேர்தலின் போது அறிவித்தது போல "மிகத் தெள்ளத் தெளிவான" (!!) ஒரு நிலையை அறிவித்திருக்கிறது தேமுதிக.
சட்டசபை தேர்தலின் போது தேமுதிக மீதுதான் அத்தனை கட்சிகளின் பார்வையும் இருந்தது. தேமுதிகவுடன் திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை தொடர்ச்சியாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் பிடி கொடுக்காமல் மவுனமாகவே இருந்து வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரது வீட்டுக்கே போய் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதையும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறியது தேமுதிக.
தனித்து போட்டி ஆனால்...
இப்படியே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுத்தடித்த விஜயகாந்த் திடீரென ராயப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின பொதுக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தம்மை கூட்டணிக்கு அழைத்து தலைவர்களுக்கு நன்றி என்றும் அறிவித்தார். ஆனால் திடீரென எழுந்த அவரது மனைவி பிரேமலா, விஜயகாந்த் பேச்சுக்கு பொழிப்புரையாக, தனித்துதான் போட்டியிடுவோம்...விஜயகாந்த் தலைமையை ஏற்கும் கட்சிகள் வந்தால் பேசுவோம் என அதிரிபுதிரியாக குழப்பியடித்தார்.
இலவு காத்த கிளி
இந்த குழப்பமான அறிவிப்பை வெளியிட்டு சில வாரங்கள் ஓடியது... விஜயகாந்தும் தினந்தோறும் கட்சி அலுவலகத்துக்கு வந்து யாராவது பேச வருவார்களா? என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார்... எந்த ஒரு கட்சியும் தேமுதிக தலைமை அலுவலகம் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. விஜயகாந்த் நிலைமை மிகவும் பரிதாபமாகிப் போனது...
மநகூவுடன் ஐக்கியம்
அப்போதுதான் ஒட்டுமொத்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் விஜயகாந்தை நேரில் சந்தித்து, அவரது தலைமையை ஏற்று தேர்தலை சந்திப்போம் என அறிவித்தனர். இதனால் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்ற புதிய அணி உருவானது. இதற்கு விஜயகாந்த் அணி என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள். ஆனால் விஜயகாந்த் அணி என்பதை உச்சரிக்கக் கூடமாட்டோம் என்று இடதுசாரித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.
கூட்டணி பேருதான் என்ன?
இதனால் அது விஜயகாந்த் அணியா? மக்கள் நலக் கூட்டணியா? மக்கள்நலக் கூட்டணி- தேமுதிகவா? என்பதற்கு விடை கிடைக்கவில்லை... தேர்தலும் முடிந்தது. இந்த ஒட்டுமொத்த கூட்டணியும் டெபாசிட்டை பறிகொடுத்து மூலையில் முடங்கிப் போனது. இதன் பின்னர் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் 10 நாட்களுக்கும் மேலாக தொடர் ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். அப்போது, மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்தது தவறு என்றே அனைத்து நிர்வாகிகளும் கருத்து தெரிவித்தனர்.
அதே அறிவிப்பு
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தருமபுரியில் இன்று அறிவித்தார். அந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நிமிடமே சட்டசபை தேர்தலைப் போலவே, தனித்துப் போட்டிதான்... ஆனால் தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் இணைந்து போட்டி எனவும் அறிவித்தார் இளங்கோவன்.
தனித்துப் போட்டி என்பதற்கும் தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் இணைந்து போட்டி என்பதற்கும் அர்த்தம் வெவ்வேறானது என்பதை இன்னமும் கூடவா தேமுதிக கூட்டம் புரிந்துகொள்ளவே இல்லையா? அல்லது புரிந்தும் புரியாதது மாதிரியே நடிக்கிறார்களா? அல்லது மக்களை குழப்புவதாக நினைத்துக் கொண்டு அரசியல் மடத்தனத்தை வெளிப்படுத்துகிறார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.