வேடசந்தூரில் லுங்கியை மடிச்சுக்கட்டி சாக்கடையை சுத்தம் செய்த தேமுதிக கவுன்சிலர்
திண்டுக்கல்: வேடசந்தூரில் தேமுதிக கவுன்சிலர் ஒருவர் பல நாட்களாக சுத்தம் செய்யாமல் கிடந்த சாக்கடையை சுத்தம் செய்துள்ளார்.
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூர் பேரூராட்சியில் இருக்கும் சில வார்டுகளில் சாக்கடைகள் பல நாட்களாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள சாக்கடைகளில் கொசுக்கள் பெருகியுள்ளது. இதனால் நோய் பரவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுல்தான் அலி தெருவில் இருக்கும் சாக்கடையை சுத்தம் செய்யுமாறு அந்த வார்டு தேமுதிக கவுன்சிலர் கதிரேசன் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இனியும் பேரூராட்சியை நம்பினால் முடியாது என்ற முடிவுக்கு வந்தார் கதிரேசன். இதையடுத்து அவர் சுல்தான் அலி தெருவில் உள்ள சாக்கடையை சனிக்கிழமை தானே சுத்தம் செய்தார்.
ஒரு கவுன்சிலரே வார்டுக்கு வந்து சாக்கடையை சுத்தம் செய்ததை பார்த்த மக்கள் அவரை பாராட்டினர்.