தேமுதிக கவுன்சிலர் உட்பட கிராம மக்கள் 25 பேர் மொட்டை போட்டு கலாமுக்கு அஞ்சலி
திண்டுக்கல்: மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திண்டுக்கல் அருகே தேமுதிக கவுன்சிலர் உட்பட கிராம மக்கள் 25 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.
மாரடைப்பால் காலமான மக்களின் ஜனாதிபதிக்கு இந்தியா முழுவதும் மக்கள் வெவ்வேறு வகைகளில் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் இன்று கடைகளை அடைப்பது உள்பட பல்வேறு வகைகளில் அஞ்சலி செலுத்தப் பட்டு வருகிறது.
ஆங்காங்கே அப்துல் கலாமின் திருவுருவப் படலுக்கு மலர் அஞ்சலி செலுத்தப் பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மவுன ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி தே.மு.தி.க. கவுன்சிலர் கதிரேஷன், கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்குள்ள தர்காவுக்கு சென்று மொட்டை போட்டார்.
இதேபோல், தாமரைப்பாடி கிராம மக்கள் இன்று மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது 25 பேர் தலைக்கு மொட்டை அடித்துக் கொண்டனர்.