கேப்டனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்... அமித்ஷாவிடம் சுதீஷ் வலியுறுத்தல்?
சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில், தேமுதிக கட்சித் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிடம் அக்கட்சி வலியுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலைச் சந்திக்க அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. சிலப்பல கருத்து வேறுபாடுகள் காரணமாக சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது.
அதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் களமிறங்கிய போதும், யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்தது பாமக. தேமுதிகவோ கடைசி வரை வெளிப்படையான ஆதரவு தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்தது. இதனால், பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாகக் கூறப்பட்டது.
3 முறைக்கு மேலாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியும், வெளிப்படையான ஆதரவு கொடுக்காததால் விஜயகாந்த் மீது பாஜக மேலிட தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே பாஜக கூட்டணியில் இருந்தபடியே, டாக்டர் அன்புமணி ராமதாசை தமிழக சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது பாமக. இதனால், பாமக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, ஸ்ரீரங்கம் தேர்தலில் பாஜகவுக்கு வெளிப்படையான ஆதரவை தேமுதிக அளிக்காதது ஏன்? என்பது குறித்து சுதீஷ் விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தனிச்சையாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தது குறித்து தங்கள் கட்சியின் அதிருப்தியையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் பாஜக கூட்டணி பலம் பெற வேண்டும் என்றால், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. அவ்வாறு பாஜக அறிவிக்காத பட்சத்தில் நாங்கள் வேறு ஒரு முடிவை அறிவிக்க நேரிடும் என்றும் சுதீஷ் அமித்ஷாவிடம் கூறியதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கிறது. தமிழக பா.ஜனதா கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பிறகு நாங்கள் எங்கள் முடிவை தெரிவிக்கிறோம்' என சுதீஷிற்கு அமித்ஷா பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் சாதகமான பதில் கிடைக்காத நிலையில் எல்.கே.சுதீஷ் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இது குறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
டெல்லியில் அமித்ஷாவை, சுதீஷ் சந்தித்து பேசியது உண்மை. பாஜக கூட்டணியில் அதிக வாக்கு வங்கி எங்களுக்கு தான் உள்ளது. இதை எல்லோரும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். பாஜக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆகவே இதற்கான முடிவை பாஜக தலைமை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் தலைவர் தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுத்து அறிவிப்பார்' என்றார்.