குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்த மாதிரி விஜயகாந்துக்கும்.. ரொம்பவே கனவு காணும் பிரேமலதா
சென்னை: கர்நாடகாவில் குறைவான இடங்களில் வென்ற ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது போல தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்புகிறார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆன்டு நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசியல் களத்தில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுகள் தொடங்கிவிட்டன.
அண்மையில் தேமுதிகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேமலதா, குட்ட குட்ட குனியற ஜாதி இல்லை நாங்க.. கூட்டணி தர்மத்தை அனைத்து கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் . இது தேமுதிக இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
டெல்லிக்கு பறந்த சி ஏ ஏ எதிர்ப்பு கையெழுத்துக்கள்... குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது திமுக
விஜயகாந்த் தலைமையில் ஆட்சி
இந்நிலையில் திடீரென 2021-ல் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆட்சி அமையும் என்றும் பேசிவருகிறார் பிரேமலதா. இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரேமலதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரேமலதா, தமிழகத்தில் தற்போதைய நிலையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இதனால் தேர்தலை முன்னிட்டு கூட்டணிகள் அமையும். வரும் தேர்தல் முடிந்த பின்னர் தேமுதிகவும் ஆட்சியில் பங்கேற்கும். அதை நோக்கியே அரசியல் சூழ்நிலை செல்கிறது என கூறியிருந்தார்.
குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது போல
இதே பேட்டியில், கர்நாடகாவில் குறைவான இடங்களைப் பெற்ற போதும் குமாரசாமியால் முதல்வராக முடிந்தது என்பதையும் பிரேமலதா சுட்டிக் காட்டுகிறார். அதிமுக அணியில் உள்ள பாமக, ரஜினிகாந்த் கட்சியுட ன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஜினிகாந்த் கூட்டணிக்கு பாமக தாவும் என்பதை அக்கட்சி இதுவரை மறுக்கவில்லை.
விஜயகாந்துக்கும் முதல்வர் பதவி
இதனால் அதிமுகவுக்கான ஒரே ஒரு நம்பகமான கூட்டணியாக தேமுதிகதான் இருக்கிறது. இதனை பயன்படுத்தி தங்களது பேரம் பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்ள நினைக்கிறது தேமுதிக. இதற்காகவே கூட்டணி ஆட்சி; ஆட்சியில் பங்கு என்றெல்லாம் பிரேமலதா பேசிவருகிறார். இதனடிப்படையில்தான் கர்நாடகாவில் குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது போல் விஜயகாந்துக்கும் முதல்வர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் பேசிவருகிறார் பிரேமலதா.
தேமுதிக கணக்கு
வடதமிழகத்தில் பாமக இல்லாத நிலையில் அதிமுகவுக்கு தங்களது தயவு தேவை என்பது தேமுதிகவின் கணக்கு. இதனால் தாங்கள் என்ன நிபந்தனை வைத்தாலும் அதிமுக ஏற்கும் வாய்ப்பிருக்கிறது எனவும் தேமுதிக கருதுகிறது. இதனால்தான் கூட்டணியில் பங்கு. சுழற்சி முறையில் முதல்வர் பதவி என அடுத்த பேரங்களுக்கு இப்போதே அடிபோடுகிறது தேமுதிக.
கனவு காணுங்கள்!