ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும்... அதிமுகவிடம் கட் அன்ட் ரைட்டாக நிற்கும் தேமுதிக
சென்னை: வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அதில் ஒரு சீட்டை கண்டிப்பாக தங்களுக்கு தர வேண்டும் என தேமுதிக தரப்பில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
இப்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதில் அதிமுக கோட்டாவில் உள்ள மூன்று இடங்களில் ஒன்றை தங்களுக்கு தர வேண்டும் என தேமுதிக நிர்பந்திக்கிறது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இது தொடர்பான தலைவலி அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓரளவு கவுரவமான எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தேமுதிகவும் கூட்டணியில் இருந்தால் தான் சாத்தியம் என அதிமுக கருதுகிறது.
இதனால் தான் தேமுதிக கொடுக்கும் நெருக்கடிகளை சமாளித்து பதில் ஏதும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறது. மேலும், குட்ட குட்ட குனியமாட்டோம் என கடந்த வாரம் பிரேமலதா பேசியபோதே, அதிமுக மூத்த நிர்வாகிகள் அதற்கு பதிலடி தரவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் தான் அவசரம் வேண்டாம் என்றும், இப்போதுள்ள சூழலில் யாரையும் பகைக்க வேண்டாம் அமைதிகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்கள். இதனிடையே சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில் முடிவு செய்வோம் என பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் பேட்டி அளித்தது அதிமுகவை உஷ்ணமாக்கியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.விவகாரம்... திடுக்கிடும் தகவல் வெளியே வரும்... தினகரன் எச்சரிக்கை
தேமுதிக சார்பாக கேட்கப்படும் ராஜ்யசபா சீட் யாருக்காக என விசாரித்தால், எல்.கே.சுதீஷுக்காக எனக் கூறுகின்றனர் தேமுதிகவினர். ஆனால், பிரேமலதா விஜயகாந்தை நீங்கள் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என சில மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்களாம். அதனால் தான் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் கோட்டைவிட்டு விடக் கூடாது என்பதில் தேமுதிக இந்தமுறை உறுதியாக உள்ளது. அதிமுக தரப்பில் இது தொடர்பாக இன்னும் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.