திமுக கூட்டணிக்காக உண்ணாவிரதம்.. சொந்த கட்சியினரிடம் அடி.. தற்கொலைக்கு முயற்சித்த தேமுதிக நிர்வாகி!
சென்னை: சென்னை தேமுதிக அலுவலகம் எதிரே, திமுகவுடன் கூட்டணி வைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்த கடையநல்லூரைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகியை, அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் அடித்து, உதைத்து விரட்டினர். இதனால் மனமுடைந்த அந்த நிர்வாகி விஷம் குடித்தார்.
சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு நடந்து வருகிறது. இதில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், தேமுதிக அலுவலத்திற்கு எதிரே கடையநல்லூரைச் சேர்ந்த மணியன் என்ற தேமுதிக நிர்வாகி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ‘தேமுதிக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்' என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற தேமுதிக நிர்வாகிகள், மணியனை அடித்து, உதைத்து அங்கிருந்து அப்புறப் படுத்த முயற்சித்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த மணியன் விஷம் குடித்தார். அப்போதும் ஆத்திரம் தீராத தேமுதிகவினர், மணியன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டு மணியன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான கோயம்பேடு சாலையில் நடந்த இந்த சம்பவங்களால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைத் தேர்தலை திமுகவுடன் கூட்டணி அமைத்தே சந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறினர்.
தற்போது தேமுதிக அதிருப்தியாளர்கள் சேர்ந்து தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.