தேமுதிக நிரந்தர பொதுச் செயலாளர் விஜயகாந்த்.. சுதீஷ் துணை செயலாளர்.. தேமுதிக பொதுக்குழுவில் முடிவு
தேமுதிகவின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி: காரைக்குடியில் இன்று நடைபெற்று வரும் தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்இ தற்போது கட்சியின் தலைவராக உள்ளார்.
தேமுதிகவில் பொதுச் செயலாளர் பதவி என்பது புதிதாக ஏற்படுத்தப்பட்டது. கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல் தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக இருந்த சுதீஷ் (விஜயகாந்தின் மைத்துனர்) தற்போது துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட 4 பேர் துணை செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளன. தேமுதிக அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு எந்த வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.