ஆலந்தூர் டூ திரிசூலம் அதிரடி பஸ் பயணம்... ரூ. 500 கொடுத்து டிக்கெட் வாங்கிய விஜயகாந்த்!
போராட்டத்திற்கு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அரசுப் பேருந்தில் ரூ. 500 கொடுத்து கண்டக்டரிடம் பஸ் டிக்கெட் வாங்கி வந்தார்.
Recommended Video
சென்னை : பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென ஆலந்தூரில் இருந்து திரிசூலம் வரை பேருந்தில் பயணித்தார். அப்போது ரூ. 500 டிக்கெட் கொடுத்து கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கி வந்தார்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தனது வீட்டில் காரில் வந்த விஜயகாந்த், திடீரென காரை விட்டு இறங்கி பேருந்தில் ஏறினார்.
அரசுப் பேருந்தில் ஆலந்தூரில் இருந்து திரிசூலம் வரையில் பயணித்த விஜயகாந்த்துடன் அவருடைய தொண்டர்களும் பயணித்தனர். பேருந்தில் ஏறி அமர்ந்த விஜயகாந்த் தனது சட்டைப் பையில் இருந்து ரூ. 500 நோட்டை எடுத்துக் கொடுத்து டிக்கெட் கேட்டார்.
டிக்கெட் வாங்கிய விஜயகாந்த்
விஜயகாந்த்துடன் வந்திருந்தவர்களுக்கும் சேர்த்து கண்டக்டர் டிக்கெட் கொடுக்க அதனை வாங்கிப் பார்த்த விஜயகாந்த், என்னப்பா இவ்வளவு கட்டணமா என்று கேட்டுவிட்டு டிக்கெட்டை மீண்டும் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். தொடர்ந்து பல்லாவரத்தில் ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய விஜயகாந்த், தான் வாங்கிய டிக்கெட்டை எடுத்து பொதுமக்களிடம் காண்பித்தார்.
இவ்வளவு கட்டணம்னா எப்படி?
ஆலந்தூரில் இருந்து திரிசூலம் வர ரூ. 115 கட்டணம் என்றால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். பேருந்தில் தான் பயணித்த டிக்கெட்டை விஜயகாந்த் காண்பித்த போது தொண்டர்கள் கைகளைத் தட்டி தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
பயணி அருகில் அமர்ந்த விஜயகாந்த்
பேருந்தில் திடீரென ஏறிய விஜயகாந்த்தை பார்த்து மக்கள் ஷாக்காகி விட்டனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் ஆரவாரங்களின்றி விஜயகாந்த் பயணி ஒருவரின் அருகில் அமர்ந்தார். விஜயகாந்த் அருகில் இருந்த இளைஞருக்கு ஒரு நிமிஷம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
மக்கள் அபிமானம் பெற்ற விஜயகாந்த்
பின்னர் திரிசூலம் வரை பயணித்த விஜயகாந்த், எந்த அளப்பறைகளும் இன்றி அமைதியான முறையில் இறங்கிச் சென்றார். அரசியல் கட்சித் தலைவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து விதவிதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தனக்கே உரிய ஸ்டைலில் அரசுப் பேருந்தில் திடீரென பயணித்து மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளார் விஜயகாந்த்.