கூடை வச்ச பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாது... !
சென்னை: அனைத்துக் கட்சிகளுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தேமுதிகவினர் தேடித் தேடிப் போய் தங்களது உளுந்தூர்ப்பேட்டை மாநாடு தொடர்பான அழைப்பிதழைக் கொடுத்து வருகின்றனராம். ஆனால் அதிமுக மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு கிடையாதாம்.
உளுந்தூர்ப்பேட்டை அருகே எறஞ்சி என்ற இடத்தில் தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்துகிறது. நாளை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில்தான் விஜயகாந்த் தனது அடுத்த கூட்டணி தொடர்பாக அறிவிக்கவுள்ளார் என்று தமிழகமே பதறிப் போய்க் கிடக்கிறது.
இந்த நிலையில் மாநாட்டுக்கான அழைப்பிதழை அனைத்துக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு தேமுதிகவினர் தேடித் தேடிப் போய்க் கொடுத்து வருகின்றனர்.
கட்சித் தலைவர்கள் அதாவது மாவட்ட வாரியான தலைவர்கள், நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுக்கு இதைக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதிமுக, சரத்குமார் கட்சியினருக்கு மட்டும் அழைப்பு கிடையாதாம்.
அதேசமயம், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்களாம்.
விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் கவுண்டமணி காமெடி சீன் ஒன்று வரும்.. கூட வே இருக்கும் செந்தில் மேன்டிலை பிடித்து நசுக்கி நாறடித்து விடுவார்.. கவுண்டர் டென்ஷனாக உட்கார்ந்திருப்பார்.. அப்போது பார்த்து ஒரு அம்மா வந்து பெட்ரோமேக்ஸ் லைட் கேட்பார்.. அதற்கு கவுண்டர் சொல்வார்.. கூடை வச்ச பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாது... அதுதான் நினைவுக்கு வருகிறது..