தேஞ்சு தேஞ்சு காணாமலேயே போன தேமுதிக.. 3% கூட ஆதரவு இல்லாமல் போன பரிதாபம்!
ஒரு காலத்தில் மாபெரும் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இன்று இருக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.
Recommended Video
சென்னை: ஒரு காலத்தில் மாபெரும் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக அதன் பெயர் கூட கருத்து கணிப்பில் வெளியிட முடியாத இடத்தை பிடித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை திரைத்துறையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி யாராலும் மறக்க முடியாது. கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய அவர்அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். எல்லா தொகுதிகளிலும் அவரது கட்சி மொத்தமாக பெற்ற வாக்கு சதவீதம் 10 சதவீதம் ஆகும்.
இதில் தேமுதிக சாதனை செய்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுபோல் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விஜயகாந்தை கொண்டாடினர்
அப்போது போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்ற திமுகவை பின்னுக்கு தள்ளினார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார். இது விஜயகாந்த் செய்த மாபெரும் சாதனையாகும். அந்த வகையில் விஜயகாந்தை மக்கள் கொண்டாடினர்.
சரிவு
ஆனால் 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியுடன் போட்டியிட்டு தேமுதிக டெபாசிட் இழந்து மாபெரும் தோல்வியை தழுவியது. மேலும் பொது இடங்களில் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம், அவரது செயல்பாடுகள், யாருடனும் கூட்டணி அல்ல என்று கூறி விட்டு கூட்டணி வைத்தது உள்ளிட்டவையால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியில் முக்கிய நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியும் அதை கேட்காமல் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்தார். இதனால் மாபெரும் சரிவு ஏற்பட்டது. அன்றிலிருந்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்றுதான் வருகின்றன. 2016-ஆம் ஆண்டு தேர்தல் விஜயகாந்துக்கு படிப்பினையை கற்று கொடுத்திருக்கும்.
போராட்டம்
அவரது கட்சி தோல்வியை சந்தித்துவிட்டாலும் மனம் தளராமல் தேமுதிக சார்பில் மக்களுக்காக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய தேமுதிக இன்று தந்தி டிவி கருத்து கணிப்பில் மற்றவை என்ற பட்டியலில் சேர்ந்துள்ளது. இன்றைய தினம் மக்களவை தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவர் என்ற கருத்து கணிப்பில் திமுக- காங், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பெயர்கள் இருந்தன.
கமலும் உண்டு பாஸ்
இவ்வளவு ஏன் கட்சிக்கு பெயரே வைக்காத ரஜினிகாந்தும் ரேஸில் இருந்து 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். கட்சியை தொடங்கினாலும் மனம் போன போக்கில் செயல்படும் கமலும் 5 சதவீதம் பெற்றார். ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுடன் போட்டியிட்ட பாஜகவுக்கு 3 சதவீதம் பெறும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் தேமுதிகவின் பெயர் அந்த கருத்து கணிப்பில் இடம் பெறவில்லை.
மற்றவை
பத்தோடு பதினொன்றாக மற்றவை என்ற இடத்தில் தேமுதிக இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மற்றவை என்பது 6 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. மற்றவை என்ற பிரிவில் தேமுதிக நிச்சயமாக இடம் பெற்றிருந்தால் அக்கட்சி 3 சதவீதத்தை காட்டிலும் மிக குறைந்த அளவில் வாக்குகளை பெற்றிருக்கும். இல்லாவிட்டால் கட்சிக்கு வாக்குகளே கிடைத்திருக்காமல் தமாகா, கம்யூனிஸ்ட்கள், வேல்முருகன் கட்சி, சரத்குமார் கட்சி ஆகியவை அந்த வாக்குகளை பிரித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தொடர்பாக தந்தி டிவி எந்த தகவலையும் அளிக்கிவில்லை.
பீனிக்ஸ் பறவை
எனவே தமிழகத்தின் நிலையையும் கட்சியில் தான் எங்கே உள்ளோம் என்பதையும் உணர்ந்து விஜயகாந்த் தனது கட்சியை மெருகேற்றி புது பொலிவுடன் மீண்டு பீனிக்ஸ் பறவை போல் வந்தால் மட்டுமே அக்கட்சி புத்துயிர் பெறும். இல்லாவிட்டால் காணாமல் போன கட்சிகளுள் ஒன்றாகிவிடும் என்பதை விஜயகாந்தும் அவரை வழிநடத்துவோரும் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.