நெல் கொள்முதல் நிலையங்களில் புதுவிதமான மோசடி..தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?..விஜயகாந்த்
சென்னை : நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் மோசடி குறித்து விசாரணை செய்து தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
நெல்கொள்முதல் நிலையங்களில் புதுவிதமான மோசடி நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் செயல்படுத்தி வருகிறது. அதில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நெல் கொள்முதல் ஆதார விலையாக பொதுரக நெல்லுக்கு ரூ.1,400-ம், சன்னரக நெல்லுக்கு ரூ.1,470-ம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நிர்வாக சீர்கேட்டாலும், முறைகேடுகளாலும், கட்டுபடியாகாத விலை நிர்ணயத்தினாலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யாமல், தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால் தமிழகத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், மிகக்குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதை மூடி மறைத்திடவும், அதில் ஊழல் செய்திடவும், புதுமாதிரியான மோசடி திட்டத்தை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் இந்த மோசடியால், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. எனவே தமிழக அரசு உரிய விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்டுள்ள இடைத்தரகர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.