ரேஷன் கடை சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்தார் விஜயகாந்த்
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை உயர்வு - ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார் விஜயகாந்த்
சென்னை : நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்.
கடந்த வாரம் தமிழக அரசு நியாயவிலைக்கடைகளில் 13 ரூபாய் 50 பைசாவிற்கு வழங்கப்பட்டு வந்த சர்க்கரையின் விலையை 24 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது. மேலும், வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு மட்டுமே பழைய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பு மக்களும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் நியாயவிலைக்கடைகளை மூடப்போகும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு அரசியல் இயக்கங்களும் இந்த விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
ஆனால், தமிழக அமைச்சர்கள் சர்க்கரை விலை உயர்வை நியாயப்படுத்தி பேசிவருகிறார்கள். இதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் இந்த விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. சர்க்கரை விலை உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும். இதனை வலியுறுத்தி நவம்பர் 3ம் தேதி தேமுதிக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என்று தேமுதிக தலைமை அறிவித்து இருக்கிறது.