அப்பாவை பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்புவதால் உங்களுக்கு என்ன நன்மை? விஜயகாந்த் மகன் வேதனை!
அப்பா நலமுடன் உள்ளார் என விஜயகாந்தின் மகன் விஜய்பிரபாகரன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை: அப்பா நலமுடன் உள்ளார் என விஜயகாந்தின் மகன் விஜய்பிரபாகரன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவதால் மனவேதனை அடைகிறோம் என்றும் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். நேற்றிரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'மியாட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது.
தலைம கழகம் அறிவிப்பு
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்தது.
விஜயகாந்த் மகன் உருக்கம்
சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். விஜய் பிரபாகரன் பேசியிருப்பதாவது,
ராஜா போல இருக்கிறார்
கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சீரியசாக இருப்பதாக தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அவர் நன்றாக இருக்கிறார். அவர் மருத்துவமனையில் நலமுடன் ராஜாபோல இருக்கிறார்.
உங்களுக்கு என்ன நன்மை?
அவருக்கு எதுவும் இல்லை. அவர் சீரியசாக இருந்தால் நான் அவருடன் இருக்க வேண்டும். ஆனால் நான் வேலை விஷயமாக நெல்லூர் வந்து இருக்கிறேன். தேவையில்லாமல் தவறான தகவலை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை?
வேதனை அளிக்கிறது
இந்த மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்த அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால் வயதானவர் போல படுக்கையில் இருப்பதாக இஷ்டத்திற்கு பேசி வருவது வேதனை அளிக்கிறது.
வேதனை அடைகிறோம்
என் அப்பாவை பற்றி இப்படி கூறுவதன் மூலம் எந்த விதத்திற்கு எனக்கு வலிக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் வீட்டில் இப்படி யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டால் இப்படித்தான் பேசுவீர்களா, தேவையற்ற பேச்சுக்களால் மனவேதனை அடைகிறோம்.
அவருக்கு ஒன்றும் ஆகாது
என் தந்தையை அம்மாவும் நாங்களும் அக்கறையுடன் பார்த்து வருகிறோம். அப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. மீண்டும் கேப்டன் வருவார் எல்லோர் முன்பும் நிற்பார். அவருக்கு ஒன்றும் ஆகாது, என் உயிரே போனாலும் அது நடக்கும்.
ஆயிரம் மடங்கு நலமுடன்
அவரவருக்கு சுமை, வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை போல ஆயிரம் மடங்கு நலமுடன் அவர் சீக்கிரம் வருவார்.
சிங்கம் போல வருவார்
எனக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ்வாக நினையுங்கள். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். நம்பிக்கை வையுங்கள். அவர் திரும்ப வருவார். அப்பா சிங்கம் போல் மீண்டும் வருவார்.
விஜயகாந்த் மகன் உருக்கம்
கட்சியினர் திடமாக இருந்தால்தான் மக்கள் திடமாக இருப்பார்கள். கேப்டனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அவர் ராஜா போல் இருக்கிறார். இவ்வாறு உருக்கமாக பேசியுள்ளார் விஜயபிரபாகரன்.