ஆட்டிறைச்சி சாப்பிடலாம்.. மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்னய்யா சட்டம்.. விஜயகாந்த் சாடல்
சென்னை: ஆட்டிறைச்சி சாப்பிடலாம் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்றால் அது என்ன சட்டம்? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
இஸ்லாமியமக்களின் புனித நாட்களாக கருதப்படுவது இப்தார் நோன்பு காலம் ஆகும். நோன்பின் மாண்பு மகத்துவமானது. நோன்பு காலத்தில் பள்ளி வாசல்களில் வழங்கப்படும் நோன்புக் கஞ்சி மருத்துவம் மிக்கது. இக் காலங்களில் மத வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களும் இப்தார் நோன்பு திறக்கும் விழாக்களில் பங்கெடுப்பதும், அரசியல் கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை நடத்துவதும் வழக்கம்.
அந்த வகையில் தேமுதிக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் அண்ணன், தம்பிகளாக பழகி வருகிறோம் என்று கூறிய விஜயகாந்த், தனது உற்ற நண்பர்களாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் எனவும் கூறினார்.
மேலும் ஆட்டிறைச்சி சாப்பிடலாம் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்றால் அது என்ன சட்டம்? என்றும் ஆடு, கோழி இறைச்சிகளை விற்க தடை விதிக்காதது ஏன்? எனவும் விஜயகாந்த் கேள்வி எழுப்பி அவர், மக்கள் அவரவர் விரும்பும் உணவை உண்ண உரிமை உள்ளது என்றார் விஜயகாந்த்.