அந்தி சாயும் பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை, ஆக.7 அன்று இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ.. விஜயகாந்த்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கமாக நினைவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கமாக நினைவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு கண்ணீர் மல்க பேசிய உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் துக்கம் தாளாமல் விஜயகாந்த் ஒரு குழந்தையை போல் கதறி அழுதார். ஒரு கட்டத்தில் பேசமுடியாமல் வீடியோவை நிறுத்தும்படி கூறிய விஜயகாந்த் தனது பேச்சை பாதியிலேயே முடித்தார்.
வியக்கிறேன், விம்முகிறேன்
இந்நிலையில் கருணாநிதி மறைவு குறித்து விஜயகாந்த் நினைவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, உலகமே உங்களை கலைஞரே என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.
சூரியன் மறைவது இயற்கை
தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு என்பதன் அர்த்தத்தை உழைப்பு என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே அந்தி சாயும் பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ!
சரித்திரம் சகாப்தமாய்
சரித்திரம் சகாப்தமாய் என்று எண்ணும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!
உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.
|
தமிழன் என்று சொல்லடா
உங்களின் நினைவாக என்றென்றும்..
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்ற உங்கள் வாசகத்துடன்,
இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்.
விஜயகாந்தின் இந்த நினைவு கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.