தேமுதிக அங்கீகாரம் ரத்து- பறிபோனது முரசு சின்னம்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: சட்டசபை தேர்தலில் முட்டை இடம் வாங்கிய தேமுதிகவின் மாநில கட்சி தகுதியை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் தேமுதிகவின் முரசு சின்னம் பறிபோயுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டசபை தேர்தலில் தேமுதிக 10,34,384 வாக்குகள் மட்டுமே பெற்றது. 2009-ல் 10.1% இருந்த வாக்கு சதவீதம் தற்போது 2.4% ஆக குறைந்துள்ளது.
ஒரு அரசியல் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 6% வாக்குகள் இருந்தால் மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்பது தேர்தல் ஆணைய விதி.
இதனால் தேமுதிகவின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழப்பதால் தேமுதிகவுக்கு அதன் முரசு சின்னம் நிரந்தரமாக கிடைக்காது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.