கோவிலுக்கு வரும் பெண்களிடம் ஆபாச பேச்சு: பூசாரி மீது சேலம் கலெக்டரிடம் தேமுதிக எம்.எல்.ஏ. புகார்
சேலம்: மேட்டூர் அருகே உள்ள கோவிலுக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசும் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்திபன் மாவட்ட கலெக்டரிம் மனு கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. தேமுதிகவைச் சேர்ந்த எஸ்.ஆர். பார்த்திபன். அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கோனூரைச் சேர்ந்த சில பெண்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு ஒன்றை அளித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேட்டூர் அருகே இருக்கும் கோனூரில் பழமை வாய்ந்த் சென்றாய பெருமாள் கோவிலில் பூசாரியாக உள்ளவர் வேங்கடம்(40). அவர் கோவிலுக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுகிறார். மேலும் தகாத செயல்களிலும் ஈடுபடுகிறார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலன் இல்லை. அதனால் தற்காலிகமாக வேலை பார்க்கும் பூசாரியை பணி நீக்கம் செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
எம்.எல்.ஏ.வுடன் வந்த பெண்கள் கூறுகையில்,
கடந்த 3 ஆண்டுகளாக பூசாரி வேங்கடம் கோவிலுக்கு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார். அவரை பலமுறை எச்சரித்தும் அவர் அப்படியே தான் பேசுகிறார். அவருக்கு பயந்து பெண்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டோம். அதனால் இது குறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.