ஆட்சியரா? அதிமுக மகளிர் அணிச்செயலாளரா? கேட்ட தேமுதிக எம்.எல்.ஏ கைது
கோவை: அ.தி.மு.க.வின் மகளிர் அணிச் செயலாளர் போல செயல்படுகிறார் கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் என்று கூறி போராட்டம் நடத்திய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. தினகரன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். தே.மு.தி.க. எம்.எல்.ஏ. என்பதற்காக அரசும், மாவட்ட நிர்வாகமும் தனது தொகுதியை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக கூறி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
ஆட்சியர் அலுவலக முகப்பில் பொதுமக்களுடன் அமர்ந்து, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. தினகரன், "சட்டமன்றத்தில் கடந்த 4 வருடமாக சூலூர் தொகுதியின் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறேன். செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதை அரசு கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை.
தே.மு.தி.க எம்.எல்.ஏ. என்ற ஒரே காரணத்துக்காக எனது தொகுதி மக்களுக்கு அரசு துரோகம் செய்து வருகிறது. எனது தொகுதியின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை ஆட்சியரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு மனுவுக்கு கூட பதில் கிடைக்கவில்லை.
விசைத்தறித் தொழில் நலிவடைந்து விட்டது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு 15 சதவீதம் வரை கூலி குறைக்கப்பட்டிருக்கிறது; ஜவுளி சந்தை வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க கூட தயாராக இல்லை. விவசாயத்தை பாதுகாக்க குளங்களை தூர்வார வேண்டும் என பலமுறை கேட்டும் நடவடிக்கை இல்லை.
திருச்சி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பல முறை மனு அளித்தும், அதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ள கூட இல்லை. சட்டசபையில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கலாம் என்றால், அதையும் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். கோவை மாவட்ட ஆட்சியர் அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் போல செயல்படுகிறார். இதை கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்ற கூறினார்.
இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு எற்பட்டது. இதையடுத்து போலீசார் எம்.எல்.ஏ. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதையேற்க மறுத்த எம்.எல்.ஏ., கலெக்டர் தங்கள் கோரிக்கை குறித்து பதிலளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. தினகரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.