சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா – ஆதரவு தர நாங்க இருக்கோம்.. வாலண்டியராக வந்த திமுக!
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கட்சித்தலைவர் விஜயகாந்த் எம்.எல்.ஏக்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் வாயில் கருப்புத் துணி கட்டியபடி அவர்கள் தர்ணா போராட்டம் நடத்திய தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இன்றும் திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாயில் கருப்புத் துணை கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் மீதான நடவடிக்கையை ரத்துசெய்து மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்களை, திமுக சட்டப்பேரவைக்குழு துணைத் தலைவர் துரைமுருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன், தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. தேமுதிக.,வினருக்கு உரிமை மீறல் குழு அளித்துள்ள தண்டனை மிக அதிகம். இப்படி தண்டனை கொடுப்பதற்கு பதில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகளே இல்லை என அறிவித்து விடலாம் என தெரிவித்தார். இதனை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஆமோதித்தார்.
வந்தார் விஜயகாந்த்
அப்போது திடீரென சட்டசபை வளாகத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கட்சி எம்.எல்.ஏ.க்களின் போராட்டத்தை முடித்துவைத்தார்.
விஜயகாந்த் குற்றச்சாட்டு
அப்போது பேசிய விஜயகாந்த எந்த மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு தமிழகப்பேரவையில் கேலிக்கூத்து நடப்பதாக குற்றம்சாட்டினார்.
திமுக வாலண்டியர் ஆதரவு
கடந்த 25ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேமுதிக எம்.எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியபோதும் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.