6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் 6 மாத சஸ்பென்ட் காலம் முடிந்தது!
சென்னை: சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 மாத காலம் முடிவடைந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் சட்டசபை கூட்டத்தின் கடைசி நாளன்று தேதி தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகன் சட்டசபையில் பேசினார். அப்போது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கள் வழியை பின்பற்றுங்கள்' என்றார். இதற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
கை கலப்பு- அடிதடி
அப்போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் தமிழழகனுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றி கை கலப்பு ஏற்பட்டது.
6 எம்.எல்.ஏக்கள் ஒரு ஆண்டு சஸ்பென்ட்
இதையடுத்து சட்டசபை ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த முடிவின்படி, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், நல்லதம்பி, அனகை முருகேசன், பார்த்தசாரதி, செந்தில் குமார், அருள் செல்வன் ஆகிய 6 பேர் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
6 மாதமாக குறைப்பு
பின்னர் நடந்த சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் தடைகாலம் 6 மாதமாக குறைக்கப்பட்டது.
சலுகைகள் ரத்து
இந்த தடை காரணமாக அவர்கள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கான சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
சஸ்பென்ட் காலம் முடிவு!
இந்த 6 பேருக்கும் விதிக்கப்பட்ட தடை காலம் கடந்த 24-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இனி அவர்கள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். சலுகைகளை பெற முடியும்.