தேர்தல் ஆணையத்தின் கைகளில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சேர வேண்டும் - தேமுதிக மனு
சென்னை: தமிழக அரசின் கேபிள் டி.வி நிறுவனத்தினை தேர்தல் ஆணையமே எடுத்து நடத்த வேண்டும் என்று தேமுதிக சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தே.மு.தி.கவின் பட்டதாரிகள் அணிச்செயலாளர் ரவீந்திரன் கொடுத்த மனுவில், "தமிழகத்தில் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி எல்லா மாவட்டங்களிலும் ஒளிபரப்பப்பட்டு வந்தது.
ஆனால், தமிழக அரசின் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் அந்த ஒளிபரப்பு ஆளும் கட்சியின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, அதை மீண்டும் ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள் டிவி நிறுவனமும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் சென்று சேர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ரவீந்திரனிடம் கேட்டபோது, "தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை இந்திய தேர்தல் ஆணையமே நடத்தவேண்டும். அரசை விமர்சிக்கும் சேனல்கள் ஒருதலைபட்சமாக முடக்கப்படுவதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.