'மக்களுடன் மட்டுமே' கூட்டணி என்று வசனம் பேசி இதுவரை 2 கூட்டணி மாறிவிட்ட விஜயகாந்த்!
சென்னை: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நீண்ட நாட்களாக தெளிவுபடுத்தாமல் மவுனம் காத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாஜக கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது தேமுதிக. கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் நாள் தனது முதல் அரசியல் மாநாட்டினை மதுரையை அடுத்த திருநகரில் தொடங்கி மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.
கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே தேமுதிக சட்டமன்றத் தேர்தலையும், உள்ளாட்சித் தேர்தலையும் சந்தித்தது.
மக்களுடன் கூட்டணி
கட்சி ஆரம்பித்தபோதே யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என்றார் விஜய்காந்த். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. இதனால் அதிமுக மற்றும் அதற்கு எதிரான வாக்குகளைப் பிரித்த தேமுதிக சுமார் 60 தொகுதிகளில் இரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பதம் பார்த்தது. இதனால் அதிமுகவும், திமுகவும் கொஞ்சம் ஆடித்தான் போயின.
2009 தேர்தலிலும் தனித்து போட்டி
2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் குறிப்பிடத் தக்க அளவு வாக்குகளைப் பெற்று, பதிவான மொத்த வாக்குகளில் 10.5 சதவீத வாக்குகளைப் பெற்றது.
மக்களை நம்பிய விஜயகாந்த்
தேமுதிகவைப் பொறுத்தவரை தனித்து போட்டியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத்தியில் காங்கிரஸ், பிஜேபி அல்லாத 3வது அணி உருவாக வேண்டும் என்று பேசி வருகிறார்கள். அதேபோன்று திமுக, அதிமுக அல்லாத கட்சியினர் இணைந்து மாற்று அணி உருவாக்க வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். கூட்டணியை நம்புகிறவர்கள்தான் இப்படி பேசுவார்கள். என்னுடைய கூட்டணி மக்களுடன் மட்டும்தான். எனவே இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று அப்போது விஜயகாந்த் சொன்னார்.
2011ல் அதிமுக உடன் கூட்டணி
ஆனால், தேமுதிக முதன் முறையாக 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிமுக தனித்து வேட்பாளர்களை அறிவிக்கவே, தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் விஜய்காந்த். இதையடுத்து மீண்டும் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்ற பல்லவியை பாடினார்.
மீண்டும் மக்களுடன் கூட்டணி
உளுந்தூர் பேட்டையில் அவரே நடத்திய ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பேசிய விஜயகாந்த், லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி சேரவேண்டும் என்று தொண்டர்களின் கருத்தை கேட்டார். அப்போது தொண்டர்கள் கூட்டணி வேண்டாம் என்று கையசைத்து கூறினர். தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள். நான் அவர்களின் பேச்சை கேட்பேன் என்றார்.
தலைவருக்கு அதிகாரம்
அதேநேரத்தில் தலைவர் என்ற முறையில் இதை மீறியும் முடிவு எடுக்கலாம். போன சட்டமன்ற தேர்தலில் தொண்டர்களை கேட்டுதான் கூட்டணிக்கு முடிவு எடுத்தேன். கூட்டணி சேர்ந்து அசிங்கப்பட்டது, அடிபட்டு, மிதிபட்டது போதும். மக்களுடன் தான் கூட்டணி. தொண்டர்களுக்கு மதிப்பு கொடுப்போம். அதே நேரத்தில் தலைவர்கள் முடிவு எடுத்தாலும் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கூட்டணி வைத்து கசப்பான அனுபவங்களை சந்தித்து விட்டோம் என்றார்.
திமுக, அதிமுக விற்கு ஜீரோ
ஆனால், மற்றொரு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியோடு தான், வரும் எம்.பி., தேர்தலில், தே.மு.தி.க., கூட்டணி வைக்கும் என்று பேசி கூட்டணிக்கு அலைவதை ஒப்புக் கொண்டார்.
இப்போது பாஜக கூட்டணியில்
கட்சி தொடங்கி 4வது தேர்தலை சந்திக்கும் விஜய்காந்த் 8 ஆண்டுக்குள் இரண்டாவது முறையாக கூட்டணியில் சேர்ந்துள்ளார். அவரது மக்களுடன் மட்டுமே கூட்டணி என்பதையும் கணக்கில் எடுத்தால் இது 3வது கூட்டணி. முதல் இரண்டு தேர்தல்களில் மக்களுடன் கூட்டணி. மக்கள் தனக்கு முகத்தில் கரி பூசியதால் முதலில் அதிமுக, இப்போது பாஜகவுடன் கூட்டணி.
வெல்வாரா...?
மாறி மாறிப் பேசுவது தான் அரசியல் என்றாலும் விஜய்காந்த் அளவுக்கு யாரும் வசனம் பேசியதில்லை என்பதால், தேமுதிகவின் வருகையால் பாஜகவுக்கு எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்பது தெரியவில்லை.
திமுக கூட்டணி இல்லாமல் போனது ஏன்?
விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணையாமல் போனதற்கு காரணம் 2016 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் 2016 சட்டமன்றத் தேர்தலில் பின்னடவை ஏற்படுத்தும் என்பதாலேயே பாஜக கூட்டணியில் இணைந்தார் விஜய்காந்த் என்கிறார்கள். இப்படித்தான் தான் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறிய பாமகவுக்கு கடந்த இரு தேர்தல்களில் கிடைத்த அடி அனைவரும் அறிந்ததே. அந்த நிலைமை தேமுதிகவுக்கு வருமா.. கப்பலை கேப்டன் சமாளித்து ஓட்டிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.