நான் என்ன பேசுறேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குதே.. விஜயகாந்தின் மாறாத சொதப்பல்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையேறி பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் குழப்பமான பேச்சையே வெளிப்படுத்தினார்.
திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் மேடையில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்று கூறியது தொண்டர்கள் மத்தியில் கட்சியின் எதிர்காலம் குறித்த கவலையை அதிகரிப்பதாக அமைந்தது.
தமிழகத்தில் கழக ஆட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக செயல்படும் என்று களமிறங்கிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 2016 சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்பட்ட தேமுதிக ஒரு சீட் கூட கிடைக்காமல் முடங்கிப் போனது.
தோல்வி அடைந்தாலும் கூட, மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போல மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே மக்கள் நலக்கூட்டணி உடைந்ததோடு விஜயகாந்தும் உடல்நிலை சரியில்லாததால் டிசம்பர் மாதம் முதல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
உடல் நலம் குறித்த சந்தேகங்கள்
கடந்த வாரம் தனது மகனின் புதிய திரைப்பட பூஜையில் பங்கேற்றதன் மூலம் தனது உடல்நிலை குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு விஜயகாந்த் முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் தொண்டர்களை பல மாதங்களாக சந்தித்துப் பேசவில்லை.
இதுகுறித்து தொண்டர்கள் மத்தியில் புலம்பல் எழுந்ததால், திருப்பூர் மே தின விழாவில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று கட்சி அறிவித்தது. மே தினக் கூட்டத்தில் சொன்னபடி விஜயகாந்த் கலந்து கொண்டார். ஆனால் அவரது பேச்சுதான் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆலையில் துவங்கிய வாழ்க்கை
மே தின கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மே தின வாழ்த்துகள் சொல்லமாட்டேன், தொழிலாளர் தின வாழ்த்துகள்தான் சொல்வேன் என அதிரிபுதிரியாக ஆரம்பித்தார். அவரது பேச்சு: 8 மணி நேர வேலை எப்போது வந்தது தெரியுமா? 1986-ல் தான். அரிசி ஆலையில்தான் என்னுடைய வாழ்க்கையைத் துவக்கினேன், அதனாலேயே அன்று முதல் நான் எங்கு சென்றாலும் தொழிலாளர்களோடுதான் இருக்கிறேன்.
கண்கலங்கிய கேப்டன்
(திடீரென பேச்சின்போது கண் கலங்கினார் விஜயகாந்த். கூட்டத்தில் இருந்த ஒருவர் அழாதீங்க கேப்டன் என்று குரல் கொடுத்தார்) நான் பேசும் போது கண்ணுல தண்ணி வரும்னு தெரியாதா, வேணும்னா தொழிலாளர்களுக்காக அழுறேன்னு வச்சுக்குங்க.
வணக்கம்
தமிழகத்தில் மின்சாரத்துறை மின்மயானத்துறை ஆகிவிட்டது. என்ன பேசுறேன்னு எனக்கே தெரியமாட்டேங்குது என்று கூறி எல்லோருக்கும் வணக்கம் சொல்லி கைகூப்பி வணங்கி விட்டு உட்கார்ந்துவிட்டார்.
தொண்டர்கள் அதிருப்தி
தமிழகத்தின் மாற்று சக்தி தேமுதிக, ஊழலை ஒழித்து புதிய அரசியல் பாதையை தேமுதிகவால் மட்டுமே அமைக்க முடியும் என்ற கோஷத்துடன் களமிறங்கிய தேமுதிக கட்சி, விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக தகிக்கும் அரசியில் தீயில் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படாத முடியாதது ஒரு பக்கம். விஜயகாந்த் உடல் நிலை மறுபக்கம். துயரத்தில் இருக்கிறார்கள் கொஞ்ச நஞ்சம் உள்ள தொண்டர்களும்.