பால் விலை உயர்வு: திமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் போராட்டம்... 28ம் தேதி!
சென்னை: பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 28ந் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது.
நேற்று பால் விலையை அதிரடியா ரூ. 10 அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பால் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது தேமுதிக.
இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஏன் பேசினார் முதல்வர்...
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி பொறுப்பேற்று சுமார் ஒருமாதமாக எதுவும் பேசாமல் இருக்கிறாரே என மக்கள் எண்ணியவேளையில், அதிசயம் ஆனால் உண்மை என்பதைப் போல ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் ஏன் பேசினார் என மக்கள் வேதனைப்படும் அளவிற்கு அந்த அறிக்கை அமைந்துள்ளது.
நிரூபணம்...
ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் எல்லா விலைகளும் உயர்ந்து கொண்டே சென்றது. முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சியில், மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் ஒரு லிட்டர் பாலுக்கு ஒரேயடியாக 10 ரூபாய் விலையை உயர்த்தி, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் தான் ஆட்சி நடத்துகிறார் என்பதை நிரூபித்திருக்கிறார். இதுவரை எந்த அரசும் பால் விலையை இந்த அளவிற்கு உயர்த்தவில்லை.
விலை உயர்விற்கான காரணம்...
கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால்தான் தற்போது விலை உயர்த்தப்படுகிறது என்று சொல்லும் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சி முடியும் வரை இதையே சொல்லிகொண்டு இருப்பாரா? அதற்கு தானே மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் தீர்ப்பளித்தார்கள்.
ஊழல்...
ஆளும் கட்சியை சார்ந்த பிரமுகர் வைத்தியநாதன் ஆவின் பாலில் கலப்படம் செய்து தினந்தோறும் பலகோடி ரூபாயை ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தி கொள்ளை அடித்தது நினை வில்லையா?
எந்த வகையில் நியாயம்...?
முறைகேடு செய்தவரிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். இதுபோன்று ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்தாலே, பாலின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. அதை விட்டு விட்டு, அப்பாவி பொதுமக்களின் தலையில் சுமையை ஏற்றுவது எந்த வகையில் நியாயம்?
மாற்று வழி...
மின் கட்டண உயர்வில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் பழைய காலம் போல் லாந்தர் விளக்குகளும், அகல் விளக்குகளும், மெழுகுவர்த்திகளும் மாற்றாக ஏற்றி வைத்து செயல்பட வேண்டும். பஸ் கட்டண உயர்வில் இருந்து மீள மாற்றாக சைக்கிள் மற்றும் மாட்டுவண்டி பிரயாணம் செய்ய வேண்டும். பால் விலை தொடர்ந்து உயர்வதால் கிராமங்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களிலும் வீட்டிற்கு ஒரு பசு மாடு வளர்த்து அதன் மூலம் பயனடையலாம்.
மவுன புரட்சி...
தமிழக மக்கள் எப்பொழுதுமே மவுன புரட்சி செய்துதான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அந்த புரட்சி ஏற்படும் பொழுது நீங்கள் செய்த தவறுகளுக்கு மக்களிடத்தில் கட்டாயம் பதில் சொல்ல நேரிடும். பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை அதிகரித்து கொடுப்பதில் தேமுதிகவிற்கு மாற்றுக்கருத்து இல்லை.
ஆர்ப்பாட்டம்...
2011-ல் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பொழுது 17 ரூபாய் 75 பைசாவாக இருந்த ஒருலிட்டர் பாலின் விலை இந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் இருமடங்காக அதாவது 34 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக உயர்த்தப்பட்ட பால் விலையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பால் விலை உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற கோரியும், சென்னையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது தலைமையில் வருகின்ற 28-ந்தேதி காலை 10 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதி...
இதற்கிடையே போராட்டத்துக்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று தே.மு.தி.க. நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் செந்தாமரை கண்ணன் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘விஜயகாந்த் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.