இனி வெறும் "மநகூ".. விலகியது தேமுதிக.. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு!!
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக தேமுதிக வெளியேறிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கைகோர்த்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.
இதற்கு தேமுதிகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியும் உதயமானது.
இத்தேர்தலில் படுதோல்வியை தேமுதிக சந்தித்தது. முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட்டைப் பறிகொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக 10 நாட்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்கு காரணம் என நிர்வாகிகள் ஒருமித்த குரலாக கூறினர்.
இந்நிலையில் தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளோம். தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிடலாம் என்றார்.