தேமுதிக - மநகூ போட்டியிடும் தொகுதிகள் எவை?: ஏப்.10ல் வேட்பாளர்கள் அறிமுகம்?
சென்னை: தேமுதிகவும், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் தங்களுக்கு சாதகமாக தொகுதிகள் எவை எவை என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போட்டியிடும் தொகுதிகள் பற்றிய உடன்படிக்கை எட்டப்பட்ட உடன் ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவும் மக்கள் நலக்கூட்டணியும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. கூட்டணியில் தேமுதிகவுக்கு 124 இடங்களும் மக்கள் நலக்கூட்டணிக்கு 110 இடங்களும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
எண்ணிக்கை அளவில் உறுதியாகியுள்ள நிலையில் களம் காணும் தொகுதிகள் எவை எவை என்பதை கண்டறியும் பணிகளில் மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிகவும் ஈடுபடத் தொடங்கியுள்ளன. கூட்டணி சார்பில் ஏப்ரல்10ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
110 தொகுதிகளில் மநகூ
தேமுதிகவுடனான கூட்டணியில், ம.ந.கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 110 தொகுதிகளில், மதிமுக 35 தொகுதிகள் வரை போட்டியிடுவது என்றும், விசிக 30 தொகுதிகள் வரை போட்டியிடுவது என்றும் மீதமுள்ளவற்றில் இடதுசாரிகள் போட்டியிடுவது என்றும் உத்தேசமாக ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள் சாதகம்
டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய பகுதிகளில் இடதுசாரிகளும், விழுப்புரம், கடலூர், சேலம், திருவண் ணாமலை, திருவள்ளூர், அரியலூர் மாவட்டங்களில் விசிகவும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மதிமுக வும் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
தனித் தொகுதிகள் எவை?
தமிழகத்தில் தனித்தொகுதிகள் 46 உள்ளதால் அவற்றை தேமுதிகவும் ம.ந.கூட்டணியும் சரி பாதியாக பிரித்துக் கொள்வது என்றும் வாய்மொழியாக பேசப்பட்டுள்ளது. அதன்படி, 23 தனித்தொகுதிகளில் ம.ந.கூட்டணிக்கு போட்டியிட வாய்ப்புள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
தென்காசி, பவானிசாகர், தாராபுரம், கீழ்வேளூர், அவிநாசி, வால்பாறை, திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட இடங்களில் போட்டியிட இடதுசாரிகள் ஆர்வத்துடன் உள்ளன.
விசிக - மதிமுக
சீர்காழி, திட்டக்குடி, காட்டுமன்னார் கோவில், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் விசிகவும், வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில், வில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் போன்ற இடங்களில் மதிமுகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
இறுதிப்பட்டியல்
5ம் கட்ட பிரச்சாரத்துக்குப் பின், இந்த உத்தேசப் பட்டியல் தொடர்பாக ஆலோசனை செய்து பட்டியலை தயாரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. அதன்பேரில், தேமுதிகவுடன் பேச்சு நடத்தி இறுதியாக ஒரு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விஜயகாந்த் ஆலோசனை
மக்கள் நலக்கூட்டணி தேமுதிக இணைந்த முதல் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னையில் வரும் ஏப்ரல் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் இக்கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளனர். இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சியின் 2ம் கட்ட நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வேட்பாளர்கள் தேர்வு
தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக எந்தந்த தொகுதி களில் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 10ல் அறிமுகம்
124 தொகுதி பட்டியலை ம.ந.கூட்டணியின் தேர்தல் பணிக் குழுவிடம் அளித்து அவர் களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணிகள் மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவடையும். இதனையடுத்து ஏப்ரல் 10த் தேதியன்று சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.