அமித் ஷாவுடன் அன்புமணி, பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு- விஜயகாந்த் புறக்கண
சென்னை: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களான அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன், ஏ.சி. சண்முகம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். ஆனால் முக்கிய கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் உட்பட யாருமே சந்திக்கவில்லை.
சென்னைக்கு 2 நாள் பயணமாக வந்த அமித் ஷா நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தி விட்டு மாலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
கிண்டி லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்த அமித் ஷாவை பாஜக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
யாதவ மகா சபை தேவநாதன்
யாதவ மகாசபையின் தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.
விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான குழுவினர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தேமுதிக புறக்கணிப்பு
ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேமுதிக சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் உட்பட யாருமே அமித்ஷாவை சந்திக்கவில்லை.
கூட்டணியில் இல்லையா?
இதனால் அக்கட்சி பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடிக்கிறதா? அல்லது மதிமுகவைப் போல வெளியேறிவிட்டதா என்ற புதிய குழப்பம் உருவாகியுள்ளது.