அண்ணா பல்கலை. துணைவேந்தராக கன்னடர் சூரப்பாவை நியமிப்பதா? விஜயகாந்த் தலைமையில் ஏப்.18-ல் கண்டன பேரணி
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக கன்னடர் சூரப்பா நியமனத்தைக் கண்டித்து ஏப். 18ல் தேமுதிக பேரணி நடத்த உள்ளது.
Recommended Video
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக கன்னடர் சூரப்பாவை நியமனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ஏப்ரல் 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெற உள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை துணைவேந்தராக நியமித்து இருப்பதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் அறிவித்துள்ளன.
தேமுதிகவும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தமிழகத்தில் காவிரி பிரச்னை தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கன்னடரான சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நியமித்து இருப்பது சரியான நடவடிக்கையல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வருகிற ஏப்ரல் 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.