விரைவில் வரப் போகும் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க முதல் ஆளாக தேமுதிக தயார்!
தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையும் வகையில் சட்டசபை தேர்தல் விரைவில் வரும் என்றும் தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராக உள்ளதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலோடு சட்டசபை தேர்தலும் வரும் அப்போது அப்போது மக்களுக்கு நிலையான ஆட்சி நிலையான தலைவர் கிடைப்பார்கள் என்று தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலையும், சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தேமுதிக தயாராக உள்ளதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ஈசா யோகாமையம் நடத்தும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த பிரேமலதா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சிலை அமைப்பதற்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்ட பின் தற்போது தடை கோருவது சரி அல்ல என்றார்.
பல லட்சம் சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஏன் இதை தடுக்க வேண்டும் என்றார்.
காமெடி எதிர்கட்சி
கடந்த வாரம் சட்டசபையில் நடந்தது நாடகம். தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. இப்போது எதிர்கட்சி காமெடி செய்து கொண்டிருக்கிறது.
சட்டை கிழிப்பு மன்றம்
சட்டசபையில் அவர்களாகவே சட்டையை கிழித்துக்கொண்டு காமெடி செய்கிறார்கள் மக்கள் அவர்களை ரசிக்கிறார்கள் என்று கூறிய பிரேமலதா, புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முடியுமா என்று எதிர்கட்சியினர் நினைக்கின்றன என்றார்.
எதுவும் நிலையா இல்லையே
நிலையான அரசாங்கம் இல்லை. நிலையான ஆளுநர் இல்லை. நிலையான உள்ளாட்சி அமைப்பு இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. நல்ல தலைவர் வர வேண்டும், நல்ல ஆட்சி வர வேண்டும் என்பதை மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். யார் நல்ல தலைவர் என்பதை மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டம்
இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயத்தை அழிக்க நினைக்கும் எந்த திட்டத்தையும் தேமுதிக ஊக்குவிக்காது. மக்களின் கருத்தைக் கேட்டுத்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார் இதனை வரவேற்கிறோம்.