அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டே ம.ந.வுடன் தேமுதிக கூட்டணி: சந்திரகுமார் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்தது தேமுதிக என்று அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் களத்தில் காற்றுவாக்கில் வரும் செய்திகள் அனைத்துமே யூகம் என ஒதுக்கிவிட முடியாது என்பதைத்தான் தமிழக சட்டசபை தேர்தல் களத்தின் தற்போதைய காட்சிகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அவரது மனைவியும் பிரேமலதா திட்டவட்டமாக கூறிவருகின்றனர்.
ஆனால் நேற்று வரை விஜயகாந்தின் வலதுகரமாக இருந்த சந்திரகுமாரோ, 117 இடங்களை திமுகவிடம் விஜயகாந்த் கேட்டதையும் விஜயகாந்த் நேரடியாக திமுக தலைவர் ஒருவரது வீட்டுக்கு போய் கூட்டணிக்கு வர விரும்பியதையும் போட்டுடைத்துவிட்டார். அதேபோல் பாஜகவுடன் பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தியதையும் "பேரம்" படியாததால்தான் மக்கள் நலக் கூட்டணிக்கு போனதையும் சந்திரகுமார் அம்பலப்படுத்தினார்.
தற்போது அதிமுகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருப்பதாக டிவி சேனல் பேட்டி ஒன்றில் சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் கட்சி நலனை முன்னிறுத்தாமல் குடும்ப நலனை முன்னிறுத்துவதில்தான் பிரேமலதா அக்கறை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
இன்னும் எத்தனை அணுகுண்டுகளோ!